பாடகி ஸ்வாகதா- க்கு பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்.. ஜேம்ஸ் வசந்தன் சொன்ன அதிர்ச்சி விஷயம்
சென்னை: பிரபல பாடகி ஸ்வாகதா தனக்கு ஒரு இசையமைப்பாளர் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசியது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளிப்படையாக குரல் கொடுத்திருப்பது இந்த விவகாரத்தை இன்னும் தீவிரமாக்கியுள்ளது.

மதுரை பொண்ணு
மதுரையில் பிறந்து வளர்ந்த ஸ்வாகதா, சிறு வயதிலேயே இசையை கற்றுக்கொண்டு பின்னர் சினிமாவில் தனது குரலால் தனி இடத்தை பிடித்தவர். 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், காற்றின் மொழி, நோட்டா போன்ற படங்களில் தனது குரலில் பாடல்கள் பாடி இருக்கிறார். அதுபோல பல மேடை நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடி இருக்கிறார். இவ்வளவு சாதனைகள் செய்த பிறகும், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு கடுமையான அனுபவத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
பாடகி ஸ்வாகதா பேட்டி
ஒரு யூடியூப் பேட்டியில் பேசும் போது, தன்னுடன் பணியாற்றிய ஒரு இசையமைப்பாளர் தான் மீது பாலியல் வன்முறை நடத்தியதாக அவர் கூறினார். சம்பளம் கூட சரியாக வழங்காமல், மாறாக பணம் வாங்கியதோடு மட்டுமல்லாமல், தன்னை பாலியல் தொந்தரவு செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டல்களும் விடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அனுபவத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி, ரிஷிகேஷில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளதாக ஸ்வாகதா தெரிவித்துள்ளார். ஆனால், நடந்ததை மறந்து விடமாட்டேன், சட்டப்படி போராடுவேன் என்ற உறுதியும் அவர் பேச்சில் தெளிவாக தெரிகிறது.

யார் அந்த இசையமைப்பாளர்?
இந்த வீடியோ வெளியாகியதும், சமூக வலைத்தளங்களில் இது வேகமாக பரவியது. "அந்த இசையமைப்பாளர் யார்?" என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது. இதே நேரத்தில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த பாடகி பேசிய வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து ஒரு நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் பதிவு
அதில் அவர் கூறியதாவது, இதைப் பெரிய அளவில் பரப்புங்கள்! இன்னொரு இசையமைப்பாளரின் பேரைக்கெடுக்கவோ, தொழில் பொறாமையாலோ அல்ல. இதில் ஸ்வாகதாவின் ஒரு கூற்றை கவனியுங்கள். "அந்த இசையமைப்பாளரின் காமவேட்டை இன்றும் தொடர்கிறது. பல இளம் பெண்களுக்கு இந்த அவலம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது." என்று சொல்லி இருக்கிறார்
அந்தப் பலிகள் தொடர்வதை உடனே நிறுத்தவும், பெண்கள் காப்பாற்றப்படவும் அவர் யார் என்பது உலகுக்குச் சொல்லப்பட வேண்டும். ஆனால் ஸ்வாகதாவை பேரைச் சொல்ல நாம் வற்புறுத்த முடியாது. ஆனால் அவர் தேவையான எல்லாக் குறிப்புகளையும் தெளிவாகச் சொல்லிவிட்டார். இந்த நேர்காணலின் கீழே உள்ள கருத்துகளில் பலரும் அவர் பெயரை ஊகித்துவிட்டனர். காவல்துறை ஒருசில நிமிடங்களில் இவரைக் கண்டுபிடித்து கைதுசெய்ய முடியும்.
#AbuserMusicDirector #TNPolice #Womenscommission #metoomovement என்று அந்த பதிவில் ஜேம்ஸ் வசந்தம் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது ஒரு தனிப்பட்ட குற்றச்சாட்டு மட்டுமல்ல, பெரிய சமூக விவாதமாக மாறி வருகிறது. ஸ்வாகதாவின் குரல், இன்னும் பலர் பேச தைரியம் தருமா என்பது தான் இப்போது அனைவரும் கவனித்து பார்க்கும் விஷயம்.












Click it and Unblock the Notifications