Siragadikka Aasai: உடைந்தது ரகசியம்! - முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றது ஏன்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சென்னை: (Siragadikka Aasai today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், ரசிகர்களின் பலநாள் கேள்விக்கு இன்று விடை கிடைத்தது. முத்து தனது தாயார் விஜயாவை விட்டு ஏன் பிரிந்து சென்றார், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது போன்ற பல ரகசியங்கள் இன்றைய எபிசோடில் வெளிவந்தன. இந்த உணர்வுபூர்வமான காட்சிகள், ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

மீனாவின் கேள்வி - கடந்த காலத்தின் ரகசியம்
நேற்றைய எபிசோடின் முடிவில், மனோஜின் வார்த்தைகளால் முத்து உடைந்துபோனார். அதைத் தொடர்ந்து, மீனா முத்துவிடம், "நீங்கள் எதற்காகச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்றீர்கள்? எந்த அம்மாவுக்கும் தன் பிள்ளையைப் பிடிக்காமல் போகாது. ஆனால், உங்கள் அம்மாவுக்கு உங்களைப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் என்ன?" என்று நேரடியாகக் கேள்வி கேட்டார். மீனாவின் இந்தக் கேள்வி, முத்துவின் கடந்த கால நினைவுகளைத் தூண்டியது. முத்துவின் சிறுவயது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை, இன்றைய எபிசோடில் ஒரு ஃபிளாஷ்பேக்காகக் காட்டினார்கள்.
விஜயாவின் பயமும், சாமியாரின் பேச்சும்
முத்து குழந்தையாக இருந்தபோது, விஜயாவுக்குத் தொடர்ந்து விபத்துக்கள் நேர்ந்து கொண்டிருந்தன. இதனால் பயந்துபோன விஜயா, ஒரு சாமியாரிடம் சென்று இதற்கான காரணத்தைக் கேட்கிறார். அப்போது, சாமியார், "உங்கள் இரண்டாவது பையன் உங்களுடனே இருந்தால், உங்களுக்குப் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். உங்கள் வீட்டில் ஒரு உயிர் பலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், ஆறு வருடங்களுக்கு உங்கள் பையனைப் பிரிந்து இருக்க வேண்டும்" என்று சொல்கிறார்.
முதலில் விஜயா, "என்னுடைய இரண்டு பையன்களில் இரண்டாவது பையன்தான் என்மேல் பாசமாக இருப்பான். அவன்தான் எனக்காக எதுவும் செய்வான். அவனை என்னால் பிரிய முடியாது" என்று மறுக்கிறார். ஆனாலும், சாமியார் சொன்ன சில விஷயங்களால் பயந்துபோன விஜயா, வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்.
முத்துவின் பிரிவு
சாமியார் சொன்னதை அண்ணாமலையிடம் விஜயா சொல்ல, முதலில் அண்ணாமலை அதை நம்ப மறுக்கிறார். ஆனாலும், விஜயாவின் தொடர் வற்புறுத்தலால், இருவரும் முத்துவை அவரது பாட்டியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே நடந்த விஷயத்தை இருவரும் பாட்டியிடம் சொல்ல, ஆரம்பத்தில் விஜயாவைத் திட்டும் பாட்டி, பின்னர் "முத்து என்னுடனே இருக்கட்டும்" என்று சொல்லிவிடுகிறார்.
அப்போது, முத்து விஜயாவைப் பிரிய முடியாமல் அழுதுகொண்டிருக்க, விஜயா அண்ணாமலையுடன் அங்கிருந்து கிளம்புகிறார். முத்துவை விட்டுப் பிரிந்த சோகத்தில் இருந்த விஜயா, மறுநாள் காலையில் பாட்டியிடம் போனில் பேசி முத்துவின் நிலைமையைக் குறித்து விசாரிக்கிறார். முத்துவைப் பார்க்க டிரஸ் எடுத்துக்கொண்டு அண்ணாமலை கிளம்பியதும், தானும் உடன் வருவதாக விஜயா ஆசையாகச் சொல்கிறார். ஆனால், அதே நேரத்தில், மனோஜ் தனது பள்ளியில் தனக்குப் பரிசு கொடுக்கப் போவதாகச் சொல்லி, விஜயாவை உடன் வரச் சொல்கிறார். வேறுவழியின்றி விஜயா மனோஜுடன் செல்கிறார்.
மனம் மாறிய விஜயா
பள்ளிக்குச் சென்றபோது, ஒரு பெண் அழுதுகொண்டு வருவதைப் பார்க்கிறார் விஜயா. அவரிடம் என்ன நடந்தது என்று கேட்க, "ஒரு சாமியார் என் பையனைப் பிரிந்து இருக்கச் சொன்னார். நான் கேட்கவில்லை. அதனால், இப்போது என் பையனின் உயிர் போயிடுச்சு" என்று அந்தப் பெண் அழுதுகொண்டே சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயா, மறுநாள் சாமியாரிடம் சென்று, "நான் என் பையனைப் பார்க்கப் போகலாமா?" என்று கேட்கிறார். அதற்குச் சாமியார், "ஆறு வருடங்களுக்கு உங்கள் பையனைப் பார்க்கவே கூடாது" என்று கண்டிப்புடன் சொல்லிவிடுகிறார்.
இப்படியாக, விஜயாவுக்கு முத்துவைப் பிடிக்காமல் போனதற்குப் பின்னால் இருந்த உண்மையான காரணம் வெளிப்பட்டுள்ளது. சாமியாரின் பேச்சைக் கேட்டு விஜயா எடுத்த முடிவுதான், முத்துவின் வாழ்க்கையில் இத்தனை துன்பங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications