Sookshmadarshini OTT: திரிஷ்யம் மாதிரி ஒரு சூப்பரான திரில்லர்.. நஸ்ரியாவின் சூக்ஷ்மதர்ஷினி விமர்சனம்
சென்னை: "வீக் என்டுக்கு, ஓடிடியில், சூப்பரான மூவி பார்க்க வேண்டும், சொல்லுடா," என்று நண்பர்களிடம் ரெகமெண்டேஷன் கேட்பவரா நீங்கள். அப்படியெனில் இந்த பதிவு உங்களுக்குதான். வாராவாரம் வீக் என்டில் ஓடிடியில் நீங்கள் ரசித்து பார்க்கத்தக்க படங்களை ரெக்கமண்டேஷனாக தர உள்ளது "ஒன்இந்தியாதமிழ்"
இந்த சீரிசின் முதல் படமாக நாம் கையில் எடுத்துள்ளது, ஜித்தின் இயக்கத்தில், நஸ்ரியா, பசில் ஜோசப் உள்ளிட்டோர் நடிப்பில் Disney+ Hotstar OTT தளத்தில் தமிழ் டப்பிங்குடன் வெளியாகியுள்ள, சூக்ஷ்மதர்ஷினி (Sookshmadarshini) விமர்சனத்தை (Review). இது ஒரு த்ரில்லர் மூவி. ஆனால் அனைத்து வயதினரும் பார்க்கும் அளவுக்கு ரத்த சிதறல்களோ, ஆபாசமோ இல்லாத த்ரில்லர்.

சூக்ஷ்மதர்ஷினி கதை
ஒரு அழகான சின்ன ஊர். ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதை வாட்ஸ்அப் குரூப்பில் அப்டேட் செய்து அலசும் பெண்கள். இப்படி ஜாலியாக போய்க்கொண்டிருக்கும் ஊருக்குள் நஸ்ரியா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தனது தாயுடன் குடியேறுகிறார் பசில் ஜோசப். நஸ்ரியாவின் திருமண நாள் கேக் கட்டிங் நிகழ்வுக்கு பசில் வரும்போதுதான் கதையில் முதல் திருப்பம் ஏற்படுகிறது. வீட்டில் விட்டுவிட்டு வந்த பசில் ஜோசப் தாய் திடீரென காணாமல் போய்விடுகிறார். பதறிப்போகிறார்கள் ஊர் மக்கள். மறதி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே போய்விட்டார் என்கிறார் பசில் ஜோசப். நம்ப மறுக்கிறார் நஸ்ரியா. ஏன் நம்ப மறுக்கிறார், பசில் ஜோசப் தாய் திரும்பவும் வீட்டுக்கு வந்தாரா, பசில் ஜோசப் வீட்டுக்குள் நடப்பது என்ன போன்றவற்றை சுவாரசியமாக திரையில் விருந்து படைத்துள்ளார் இயக்குநர் ஜித்தின்.
நஸ்ரியா நடிப்பு
படத்தை தாங்கிப் பிடிப்பது நஸ்ரியாவின் நடிப்புதான். வருடங்கள் கடந்தாலும் அந்த துருதுருப்பு அவரை விட்டு போகவில்லை. வீட்டுக்குள் இருந்து வரும் குக்கர் சத்தம், மாடியில் காய வைத்த துணியை எடுத்தது, லைட் சுவிட்சை சரியாக ஆப் செய்தது என, பசில் ஜோசப் தாய் மறதி நோயால் பாதிக்கப்படவில்லை என்று நஸ்ரியா கண்டுபிடிப்பது எல்லாம் வேறு ரகம். பசில் ஜோசப் தனது வழக்கமான காமெடி நடிப்பை தவிர்த்து இயல்பாக நடிக்க முயன்றுள்ளார். ஆனால், இருவகை உணர்வுகளை காட்ட வேண்டிய இடங்களில் முகத்தில் அது மிஸ்சாகிறது. காமெடியனாகவே நமது கண்களுக்கு தெரிகிறார். ஒருவேளை இந்த கேரக்டரை பகத் பாசில் தனது டிரேட்மார்க் முக பாவனைகளோடு செய்திருந்தால், படமே வேறு ஒரு லெவலில் பயணித்திருக்குமோ என்ற எண்ணம் நமக்கு தோன்றாமல் இல்லை.
படத்தின் பலம்
படத்தின் மிகப்பெரிய பலம், பார்வையாளர்களைத் திரையில் கட்டிப்போட்டு, குறிப்பாக இரண்டாம் பாதியில் திருப்பங்கள் நிறைந்த கதையுடன் அவர்களை இருக்கையின் நுனியில் வைத்திருப்பதுதான். ஆரம்பத்தில் சில இடங்களில் வேகம் சற்று குறைந்தாலும், எதிர்பாராத திருப்பங்களுடன் கதை மீண்டும் வேகமெடுக்கிறது. பூஜா மோகன்ராஜ் போன்ற துணை நடிகைகளின் காமெடி கதாப்பாத்திரமும் சுவாரசியம் சேர்க்கிறது. தோழிகளை போனிலேயே கோ-ஆர்டினேட் செய்தபடி, சுவரை தாண்டி விழுந்து பக்கத்து வீட்டில் நஸ்ரியா உளவு பார்க்கப்போகும் காட்சியில் பார்ப்பவர்களுக்கும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. அந்த அளவுக்கு சிறப்பான ஒளிப்பதிவை கவனிக்க முடிந்தது. பெண்கள் இணைந்து உளவு பார்க்கும், மகேஷ் பாபுவின் ஸ்பைடர் திரைப்பட காட்சியை நினைவூட்டியதையும் மறுக்க முடியாது. நஸ்ரியாவின் நடிப்பு, ஷரண் வேலாயுதனின் ஒளிப்பதிவு, கிளைமேக்ஸ் வரை பார்வையாளர்களை ஒரு முடிவுக்கு செல்ல முடியாதபடி வைத்திருந்த திரைக்கதை, கிளைமேக்ஸ் ட்விஸ்ட் ஆகியவை படத்தின் பலங்களாகும்.

படத்தின் பலவீனம்
படத்தின் ஆரம்ப காட்சிகள் கேஷுவலாக மெதுவாக போவது, ஏரியாவில் சிசிடிவி இல்லாமல் இருப்பதாக காட்சியிருப்பது, காவல்துறையை பெரிதாக காட்சிகளில் ஈடுபடுத்தாதது, நஸ்ரியாவின் கணவர் நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிடும் கதாப்பாத்திரம் போல நஸ்ரியாவை பற்றி கண்டுக்காமலே இருப்பது ஆகியவற்றை படத்தின் பலவீனமாக கூறலாம். ஆனால், இவை படத்தின் திரில் அனுபவத்தை கெடுக்கவில்லை.
சூக்ஷ்மதர்ஷினி படம் எப்படி?
அதிரடி சரவெடி இல்லாத, ஆனால், திரிஷ்யம் போல, கண்ணை திரையை விட்டு அகற்றவிடாத, ஒரு த்ரில்லர் மூவி பார்க்க வேண்டும் என்று விரும்புவோர் சூக்ஷ்மதர்ஷினி திரைப்படத்தை தாராளமாக பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications