மொக்கைச்சாமியை ஞாபகம் இருக்கா? ‘சுப்ரமணியபுரம்’ புகழ் நடிகர் இலைக்கடை முருகன் காலமானார்!
மதுரை: குணச்சித்திர நடிகர் இலைக்கடை முருகன் இன்று காலமானார். 'சுப்ரமணியபுரம்' படத்தில் மொக்கைச்சாமி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற முருகன், இலைக்கடை நடத்தி வந்தார்.
'சுப்ரமணியபுரம்' படம், தமிழ் சினிமாவில் முக்கியமான மைல் ஸ்டோன் படமாக ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இந்தப் படம் இயக்குநராக சசிகுமாருக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தத் திரைப்படம் தான் நடிகர் ஜெய்க்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, ஸ்வாதி என்று பலர் நடித்த இந்தப் படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து இருந்தார்.

'சுப்ரமணியபுரம்' படத்தில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்திருந்தார் சசிகுமார். டும்கான், மைக் செட் சித்தன், கோவில் தர்மகர்த்தா மொக்கச்சாமி என்று பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தன.
அந்த வகையில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் மொக்கச்சாமி கதாபாத்திரத்தில் முருகன் என்பவர் நடித்திருந்தார். இவர் மதுரை மாட்டுத்தாவனி பகுதியில் உள்ள மார்க்கெட்டில் இலைக் கடை வைத்து நடத்தி வந்தார்.
இயக்குநர் சசிகுமார், தனது குழுவினரோடு மாட்டுத்தாவணி மார்க்கெட் பகுதியில் லொக்கேஷன் பார்க்கச் சென்றபோது, இலைக்கடை வைத்திருந்த முருகனை பார்த்து, நடிக்க வைத்துள்ளார். 'சுப்ரமணியபுரம்' படத்தைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்த முருகன் பின்னர் மீண்டும் இலைக் கடை தொழிலுக்கே முழுமையாகச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நடிகர் இலைக்கடை முருகன் மாரடைப்பால் இன்று காலமானார். 'சுப்ரமணியபுரம்' உட்பட 5க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இலைக்கடை முருகன் இன்று மாரடைப்பால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 78. அவரது மறைவு ரசிகர்கள், திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications