அடித்துக் கொண்டு அழும் போட்டியாளர்கள்.. பிக் பாஸ் ஹேப்பி அண்ணாச்சி!
பிக் பாஸ் வீட்டில் இப்போது சண்டை சச்சரவுகள் அதிகரித்துள்ளது.
சென்னை: கடந்த சில எபிசோட்களாக பிக் பாஸ் வீடு சந்தைக்கடை போன்று சண்டைகள் நிறைந்து, பார்வையாளர்களின் காதுகளில் இரத்தம் வரும் அளவிற்கு ஒரே கூச்சலாகக் காணப்படுகிறது.
பிக் பாஸ் முதல் சீசன் போல் இரண்டாம் சீசன் அவ்வளவாக விறுவிறுப்பாக இல்லை என்பது தான் மக்களின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. இதனால் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
இதனால், எப்படியும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட நினைத்த பிக் பாஸ், பல அதிரடி முடிவுகளை அறிவித்து போட்டியாளர்களுக்கு சண்டையை மூட்டி விட்டுள்ளார்.
அலட்சியப்போக்கு:
இதுவரை பிக் பாஸ் வீட்டில் நாட்களைக் கடத்தினால் போதும் என அலட்சியமாக நாட்களைக் கடத்தி வந்தனர் போட்டியாளர்கள். அது அவர்களின் நடவடிக்கை மூலமாகவே தெரிய வந்தது. கடந்த முறை போல் இல்லாமல் விதிமுறைகளை மதிக்காமல் ஆங்கிலத்தில் பேசுவது, பகலில் தூங்குவது போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தலைவருக்கு தடா:
இதனை குறும்படம் போட்டு மக்களுக்கு காட்டிய பிக் பாஸ், கூடவே போட்டியாளர்களையும் கண்டித்தார். இதற்குத் தண்டனையாக இந்த வாரம் யாருக்குமே பிக் பாஸ் வீட்டின் தலைவராகும் தகுதியில்லை என அறிவித்தார். அதோடு அதிகமுறை விதிகளை மீறியதற்காக மஹத்தை சிறையில் அடைத்தார்.
கத்தித் தீர்த்த ஐஸ்:
அந்த குறும்படத்தில் வந்த சில காட்சிகளை தனக்குத் தெரிந்த வகையில் மொழிப்பெயர்ப்பு செய்து ஐஸ்வர்யாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் வைஷ்ணவி. இதனால் வீடு சிறிது நேரம் ஒரே கூச்சலும் குழப்புமாக இருந்தது. அநியாயத்திற்கு கீச் குரலில் கத்திக் கடுப்பேத்துகிறார் ஐஸ்.
நாமினேசன் :
ஐஸ் - வைஷ் சண்டையின் தீவிரம் பத்தவில்லை என பிக் பாஸ் நினைத்தாரோ என்னவோ, அடுத்ததாக நாமினேஷனை அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையாக கார்டன் பகுதியில் வைத்து நடத்தினார். இதன் மூலம் அந்த வீட்டில் யார் யாருக்கு யாரெல்லாம் எதிரி என்பது வெளிப்படையாகத் தெரிய வந்தது.
விறுவிறுப்பு:
இதிலும், ஜனனி, ரித்விகா மற்றும் சாரிக் மட்டும் மிகவும் பாதுகாப்பாக நடுநிலையோடு இருவரை நாமினேட் செய்வதாகக் காட்டிக் கொண்டனர். ஆனபோதும், இந்த பகுதியின் மூலம் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் பல அணிகளாகப் பிரிந்தது. இது தொடர்பாக அவர்கள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டனர். இதனால் தற்போது நிகழ்ச்சியின் விறுவிறுப்பு சற்றுக் கூடியுள்ளது. ஒருவழியாக 30 நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் தற்போது விழித்துக் கொண்டுள்ளார் என்பது பாராட்டுதலுக்குரியது.