விஜயகாந்தின் "சத்ரியன்" முதல் தேசிய விருது சர்ச்சை வரை: நடிகர் திலகனின் அசாத்திய நடிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் நடித்த "சத்ரியன்" திரைப்படத்தில் வில்லனாக வந்து ரசிகர்களை மிரட்டியது முதல் தேசிய விருது விவகாரத்தில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தது வரை, மலையாள நடிகர் திலகனின் அசாத்திய நடிப்புத் திறன் குறித்து செல்வன் அன்பு விரிவாகக் கூறியுள்ளார்.

அவர் குறிப்பிட்டதாவது: "விஜயகாந்த் படங்களில் சரத்குமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் போன்றோர் மிரட்டலான வில்லன்களாக வந்து தூள் கிளப்பியிருக்கிறார்கள். ஆனால், எந்த வித முன் தயாரிப்புமில்லாமல், அசத்தலான வில்லனாக வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ஒரே வில்லன், மலையாள நடிகர் திலகன் தான்.

television vijayakanth thilagan

'சத்ரியன்' படத்தில் விஜயகாந்த் பன்னீர் செல்வமாக நடிக்க, திலகன் அருமைநாயகம் அண்ணாச்சி கதாபாத்திரத்தில் வந்தார். பாலப்புரத்து கேசவன் சுரேந்திரநாத திலகன் எனப்படும் நடிகர் திலகன், மலையாளத் திரையுலகின் ஒரு பன்முக நடிகர். அவர் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் மலையாளத்தில் சிறப்பாகக் கையாண்டவர்.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த திலகன், 1972-ல் சினிமாவுக்குள் நுழைந்தார். எனினும், 1979 முதல் தான் அவரது படங்கள் வெளியாகத் தொடங்கின. கே.ஜி. ஜோர்ஜின் 'யவனிகா' திரைப்படம் தான் திலகனை கேரளம் முழுவதும் அறியப்படும் நடிகராக மாற்றியது. அதில் அவர் ஏற்றிருந்த 'வக்கச்சன்' என்கிற நாடக முதலாளி கதாபாத்திரம் அவருக்கு கேரள மாநில விருதையும் பெற்றுத் தந்தது. பின்னர் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்படிச் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த திலகன், பாலு மகேந்திராவின் 'யாத்ரா' படத்தில் நடித்த ஜெயிலர் கதாபாத்திரம் அவரை பயங்கர வில்லனாக மாற்றியது.

இப்படி வில்லனாக நடிக்கும்போதே, 'சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்' படத்தில் வீட்டை காலி செய்ய வரும் குண்டாவாகக் காமெடி செய்தார். 'நமக்கு பார்கான்' படத்தில் முந்திரித் தோப்புகளில் தான் ரகசியமாக வைத்திருக்கும் பெண்மணியின் மகளான சாதனாவையே பலாத்காரம் செய்யும் கொடூர வில்லனாக வந்தார். ஆனாலும், கேரள ரசிகர்கள் அவரை வெறுக்கவில்லை என்பதிலேயே அவர்களின் பார்வை தெளிவாகப் புரியும்.

'வருஷம் 16' படத்தின் மலையாள மூலமான 'என்னென்னும் கண்ணேட்டன்ட' படத்தில், கண்ணனுக்கு எல்லா விதத்திலும் உதவும் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்தார். 'தாத்தா' என்றாலே உடனே நினைவுக்கு வரும் படம் 'மூணாம் பக்கம்'. விடுமுறையில் வந்து கடலில் குளிக்கச் சென்ற பேரன் ஜெயராம் கடலில் மூழ்கிவிட, பேரனின் உடலுக்காகக் காத்திருக்கும் 'தம்பி' என்கிற தாத்தாவாகத் திலகனின் நடிப்பில் நடிப்பே தெரியாது.

'கிரீடம்' படத்தில் மகன் மோகன்லாலோடு அவர் வைத்த பாசம், அந்தப் படம் முடியும் போது வெறுப்பாகி, வேதனையில் உழலும் திலகனின் நடிப்புக்கு மாற்று இல்லவே இல்லை. கமலுக்கு வில்லனாக 'சாணக்யன்' படத்தில் முதல்வராக வரும் திலகனின் கதாபாத்திரம் 'சத்ரியன்' படத்தில் வரும் அண்ணாச்சி கதாபாத்திரத்துக்கு முன்னோடி.

'கௌரவம்' படத்தில் காலிழந்த வில்லன் அலியார், 'நாடோடிக்காற்று' படத்தில் திடுக் திடுக் எனப் பயப்படும் அனந்தன் நம்பியார், 'தனியாவர்த்தனம்' படத்தில் மம்முட்டிக்குக் காலில் விலங்கு இடும் அம்மாமா, 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் மலையாளக் குடும்பப் புராணத்தில் அப்பா, மகன் கொலையாளியாகி சிறைக்குப் போனதால் மகளை நாடக நடிகையாக்கி மது அருந்தி வாழும் 'செங்கோல்' கான்ஸ்டபிள், 'கிலுக்கம்' படத்தில் ரேவதியின் தந்தையாக ஜஸ்டிஸ் பிள்ளை, மருமகனை விலை கொடுத்து வாங்கியதாகக் கருதும் ஜெயராமின் மாமனாராக 'ஜோர்ஜ்குட்டி C/o ஜோர்ஜ்குட்டி' படத்தில், 'ஸ்படிகம்' படத்தில் கணக்கு வாத்தியார் கடுவா சாக்கோ என எண்ணற்ற பரிமாணங்களை அளித்தவர் திலகன்.

பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்த திலகன், 'பெருந்தச்சன்' படத்தில் ஏற்றிருந்த ராமன் பெருந்தச்சன் பாத்திரத்தின் நடிப்புக்காக தேசிய விருது பெற்றிருக்க வேண்டியது. திலகனுக்குக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரத்தில், காங்கிரஸ் ஆட்சியாளர் ஒருவர் அமிதாப் பச்சன் நடிப்புக்கு முழுக்குப் போடுவதால் அவருக்கே கொடுக்க வேண்டும் என லாபி செய்து விருது அமிதாப்புக்குப் போனது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 'தி லாஸ்ட் வேர்ல்ட்' என்கிற டைனோசர் படத்தில் ஒரு இந்தியக் கதாபாத்திரம் இருந்தது. அதற்காக ஸ்பீல்பெர்க் திலகனை அணுகியதாகவும், திலகன் அப்போது மொட்டை அடித்திருந்ததால் ஸ்பீல்பெர்க் 'விதேயன்' படத்தில் நடித்த கோபக்குமாரிடம் சென்றதாகவும் சொல்கிறார்கள். கோபக்குமாரும் விசா பிரச்சனையால் ஹாலிவுட்டுக்குச் செல்லவில்லை.

'சத்ரியன்' படத்தில் திலகனின் "செல்வம்.... நீ அந்தப் பழைய பன்னீர் செல்வமா வரணும்" என்கிற வசனம். தமிழர்கள் 'செல்வம்' என அழைக்கும் போது 'ம்' சைலண்ட்டாக வரும். மலையாளியான திலகம் 'செல்வம்' என அழுத்தி உச்சரிக்கும் அந்த வசனம் புகழ்வாய்ந்தது. விஜயகாந்த் உடல்நலமில்லாமல் இருந்தபோது, எல்லோரும் 'பழைய பன்னீர் செல்வமாக வாருங்கள் விஜயகாந்த்' என எழுதினார்கள். அந்த வசன உச்சரிப்புதான் நம் மனதில் அந்த வசனத்தைப் பதிய வைத்தது.

"சத்ரியன்... சத்ரியனுக்குச் சாவே இல்லைன்னு சொல்லிட்டு என் காலடியிலே நாய் மாதிரி விழுந்து கிடக்கிறியேடா...." என்று திலகன் நக்கலாகப் பேசும் அந்த வசன உச்சரிப்பு இப்போதும் பலராலும் ரசிக்கப்படுகிறது.

படப்பிடிப்பின் இடையில் மது அருந்துவது, அதை எப்போதும் தன் கூடவே கொண்டு வருவது, டச்சப், சமையலுக்குப் பெண்கள், சூப்பர்ஸ்டார் நடிகர்களோடு மோதல் எனப் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி, கடைசி காலங்களில் படங்கள் இல்லாமல் இருந்தும் கூட, வயதான சிங்கமாகப் பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டிருந்தவர் திலகன். அவருக்கு இரண்டு மனைவிகள், மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். தனது முத்திரையைத் திரையில் பதித்துவிட்டு 2012-ல் மறைந்து போனார்."

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+