TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி!
சென்னை: உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டிஎன் 2026' படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய சர்ச்சையையும் கவனத்தையும் உருவாக்கி வருகிறது.

த. நா 2026 டீசர்
இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்தே, இது நடிகர் விஜயை குறிவைத்து எடுத்த அரசியல் சாடை படம் போல இருக்கிறது என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது. குறிப்பாக டீசரில் வரும் வசனங்கள், நட்டி நட்ராஜின் நடிப்பு ஸ்டைல், அவரின் லுக், ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாறும் காட்சிகள் போன்றவை எல்லாம் விஜயின் அரசியல் பயணத்தை நினைவூட்டுவதாக ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.
ஆதவ் அர்ஜுனா பேச்சு
இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா இந்த படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். ட்ரெய்லரில் எங்க தலைவர் விஜயை கலாய்ப்பது போல காட்சிகள் இருப்பதாகவும், ஒரு தனிநபரை இப்படிச் சினிமாவில் சித்தரிப்பது சரியா என்ற கேள்வியையும் எழுப்பினார். மேலும், 'ஜனநாயகன்' போன்ற படங்கள் தேர்தல் காரணமாக தள்ளிப்போயிருக்கையில், முழுக்க அரசியல் பேசும் இந்த படம் எப்படி ரிலீஸ் ஆகிறது என்றும் கேள்வி எழுப்பினார். இதற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
உமாபதி பதிலடி
இதற்கு உடனடியாக இயக்குனர் உமாபதி ராமையா பதிலடி கொடுத்தார். "நாங்கள் விஜய் அண்ணாவை கலாய்க்கவே இந்த படம் எடுத்தோம் என்று சொல்லப்படுவது முற்றிலும் தவறு. எனக்கு விஜய் அண்ணா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அவர் ஒரு சிங்கம் மாதிரி. அந்த மாதிரி ஒருவரை எப்படிச் சினிமாவில் அவமதிக்க முடியும்? ட்ரெய்லரை பார்த்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். படம் முழுவதும் பார்த்த பிறகு தான் உண்மை புரியும்" என்று அவர் விளக்கம் அளித்தார்.
தம்பி ராமையா விளக்கம்
மேலும், இந்த படத்தின் கதை எழுதியும் நடித்தும் இருக்கும் தம்பி ராமையாவும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். "ஆதவ் அர்ஜுனா பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு யாரோ தவறான தகவல் கொடுத்திருக்கலாம். நாங்கள் எந்த இடத்திலும் விஜயை தவறாக காட்டவில்லை. விஜய் எனக்கு தம்பி மாதிரி. அவருடன் நான் வேலை செய்த அனுபவமும் இருக்கிறது" என்றார்.
அதோடு, இந்த படத்தின் கதை பல வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டு, படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். "இப்போ நடக்கும் அரசியல் சம்பவங்களை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது என்று சொல்வது சரியல்ல. ஒரு காட்சி எடுக்கவே மாதங்கள் ஆகும். சமீபத்தில் ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் கண்ணாடி பாட்டில் வீசப்பட்டது போல சம்பவம் கூட அந்த படத்தில் இருக்கிறது. அந்த சம்பவங்களை ஒரு வாரத்தில் எடுத்து படத்தில் சேர்க்க முடியாது" என்று அவர் கூறியுள்ளார்.
படக்குழு பதில்
இப்படியாக, டீசர் வெளியானதிலிருந்து தொடங்கிய இந்த சர்ச்சை, தற்போது அரசியல் விவாதமாகவே மாறி வருகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து தொடர்ந்து ஒரே பதில் தான் வருகிறது - "இது யாரையும் குறிவைத்து எடுத்த படம் இல்லை, ஒரு பொது அரசியல் கதை".
இப்போது எல்லோரின் கவனமும் ஏப்ரல் 10ஆம் தேதி பட ரிலீஸை நோக்கி திரும்பியுள்ளது. படம் வெளியான பிறகே இது உண்மையில் யாரை குறிக்கிறது, அல்லது வெறும் கற்பனை கதையா என்பது தெளிவாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications