காளை மாதிரி 4 புள்ளைங்களைப் பெத்துட்டு இந்தம்மா படற பாடு இருக்கே.. அயயயயயோ!
சென்னை: சன்டிவியில் பிரியாமானவள் சீரியலை கொஞ்சம் திட மனசு உள்ளவங்க பார்க்கலாம்ங்க. ஐயயோ அப்படியும் சொல்ல முடியாது... ரொமான்ஸ் மூட் அதிகம் உள்ளவங்களும் பார்க்கலாம்.
இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலைப் பார்த்தா, தினம் தினம் திகில் குறும்படம் பார்க்கற மாதிரி ஃபீலிங் நிச்சயமா வரும். ரத்தம், கொலை, கொள்ளை, வன்முறை, ஆள்கடத்தல்னு இருந்தாலும், இசை-பிரபா தம்பதியோட காதல் ரசம் கனிவதையும் அப்பப்போ காட்சியா தெளிச்சு இருப்பாங்க.
உமா கிருஷ்ணன் அழகிய அம்மா. இவங்களுக்கு நட்ராஜ், திலீபன், சரவணன், பிரபான்னு துள்ளி வரும் காளை கண்ணு மாதிரி நாலு புள்ளைங்க. மனைவி மேல பாசத்தை பொழியும் கிருஷ்ணன். இப்படித்தான்ங்க இந்த சீரியல் போயிகிட்டு இருந்துச்சு.
குப்பை குழப்ப சீரியல்களுக்கு மத்தியில் ஒரு பரவசம்.. ஷீரடி சாய்பாபா!
இலங்கை பொண்ணு
கிருஷ்ணன் தனது மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிக்காம, இலங்கை அகதியாக வந்த உமாவை காதலித்து கல்யாணம் பண்ணிக்கறார். இப்போ மாமாவுக்கும், கிருஷ்ணன் மேல ஆசைப்பட்ட மாமா பொண்ணுக்கும் கிருஷ்ணன் மேல பகை ஆரம்பிக்குது.
கண்டவுடன்
இத்தனை வருஷம் கிருஷ்ணன் குடும்பத்துடன் எங்கிருக்கிறான் என்று தெரியாத நிலையில், குடும்பத்துடன் சென்னையில் வசிப்பதை தெரிந்து கொண்ட மாமா, தனது போலீஸ் அதிகாரி மாப்பிள்ளையுடன் சேர்ந்து கிருஷ்ணன் குடும்பத்தை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டுவதிலிருந்து சீரியலில் வன்முறை தலை விரித்தாடுதுங்க.
பசங்க
நாலு ஆம்பிளை பசங்க மேலயும் ஒவ்வொருத்தரும் ஒரு கண் வச்சு கல்யாணம் பண்ணிக்கறாங்க. அதோட முடியுதா, பிரபா இலங்கையிலிருந்த அம்மா போல அகதியா வந்த தாய் மாமா பொண்ணு இசையை காதலிக்க. பிரபாதான் எனக்கு வேணும்னு கிருஷ்ணனின் தம்பி பெண் காதலிக்க இதன்மூலமும் சதித்திட்டம், ஆட்கடத்தல். அடிதடி... அப்பப்பா. கடைசியில இசைதான் பிரபாவை கல்யாணம் பண்ணிக்கறா.
4 கொலைகள்
சீரியலில் இதுவரை 4 கொலைகள் நடந்திருக்குன்னு கணக்கு சொல்லுது. ஆனா, உமாவின் இரண்டாவது மருமகள் பூமிகாவின் குளியல் காட்சியை வீடியோ எடுத்து, பூமிகாவை மிரட்டுகிறான் சொந்தக்கார வாலிபனான மானங்கெட்ட மாப்பிள்ளை. அவனை கொலை செய்வதுதான் பிரியமானவள் சீரியல் முதல் கொலை. அது இன்னும் இன்னும்னு நீண்டுகிட்டே போவுது.
என்னன்னா
ஒவ்வொரு கட்டத்திலும் உமாவின் நாலு பிள்ளைகளில் ஒருத்தனை இவன் எனக்கு வேணும்னு எதிரி குடும்ப பொண்ணுங்க ஆசைப்படறதும், அதையும், இதையும் சொல்லி உமாவை மிரட்டுவதும் சீரியலில் ரொம்ப அசால்ட்டா நடக்கும் விஷயங்கள். இப்போ உங்க புள்ளை திலீபன் எனக்கு வேணும்னு ஒருத்தி உமாவை மிரட்டிட்டு போறா. என்ன பண்ணுவாங்க உமா?
பூஜை அறைக்கு போவாங்க.. சாந்தமா முகத்தை வச்சுக்கிட்டு, மெதுவா கிருஷ்ணன்கிட்ட சொல்லுவாங்க. பிரியாமானவள் அம்மா கேரக்டர் இப்படித்தான்னு ஆரம்பத்துலயே காமிச்சதுதானே...!