விமர்சனம் என்கிற பெயரில் சினிமாவை அழிக்கிறார்கள் - வடிவேலுவின் ஆவேசம்! ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பதில்
சென்னை: ஒரு காலத்தில், ஒரு படத்தின் வெற்றி, அதன் கதையையும், நடிகர்களின் நடிப்பையும் மட்டுமே சார்ந்து இருந்தது. ஆனால், தற்போது, ஸ்மார்ட்போன் மற்றும் யூடியூப் கலாச்சாரம் வந்த பிறகு, ஒரு படத்தின் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிப்பதில், யூடியூப் விமர்சனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால், பெரிய நடிகர்களின் படங்களும் வசூல் ரீதியாகப் பாதிக்கப்படுவதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், நடிகர் வடிவேலு பேசிய ஆவேசமான பேச்சு, தற்போது திரையுலகில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் இதற்கு பதில் கொடுக்க வகையில் ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

யூடியூப் விமர்சனங்களின் பாதிப்பு
ஒரு திரைப்படம் வெளியாகி முதல் காட்சி முடிந்த உடனேயே, யூடியூபர்கள் தங்கள் விமர்சனங்களை உடனடியாகப் பதிவிடுகிறார்கள். இதில், நேர்மறையான விஷயங்களைப் பேசுவதை விட, எதிர்மறையான விஷயங்களைப் பேசுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
வசூல் பாதிப்பு
யூடியூப் விமர்சனங்களைப் பார்த்துவிட்டுத்தான் ரசிகர்கள் படத்திற்குச் செல்வதா, வேண்டாமா என்று முடிவு செய்கிறார்கள். சில படங்களில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களால், அதன் வசூல் பாதிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு நடிகரே, சோசியல் மீடியா பி ஆர் வைத்து, தனக்குப் போட்டியாக இருக்கும் நடிகரின் படத்திற்கு எதிராக எதிர்மறை விமர்சனங்களைப் பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் பரவி வருகின்றன. அதேபோல், அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் யூடியூபர்களுக்குப் பணம் கொடுத்து, தங்கள் படத்திற்கு ஆதரவான விமர்சனங்களைப் பரப்புகிறார்கள் என்றும், பணம் கொடுக்காவிட்டால் விமர்சனம் செய்வதையே தவிர்த்து விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
வடிவேலுவின் ஆவேசம்
புதிதாகக் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் கட்டிடம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு, யூடியூப் விமர்சனங்கள் குறித்து ஆவேசமாகப் பேசினார். "விமர்சனம் என்கிற பெயரில், ஒரு பத்து பேர் ஒட்டுமொத்தமாக சினிமாவையே அழித்து வருகிறார்கள். சில யூடியூபர்களைப் போர்க்கால அடிப்படையில் உண்டு இல்லை எனச் செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியாது" என்று அவர் எச்சரித்தார்.
வடிவேலுவின் இந்தக் கருத்துக்கு, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் நக்கலாகப் பதிலளித்துள்ளார். "கேங்கர்ஸ் படத்தில் காமெடி பண்ணினாலும் படம் ஓடவில்லை. மாரீசன் படத்தில் சீரியஸாக நடித்தும் ஓடவில்லை. எல்லாத்துக்கும் காரணம் யூடியூபர்கள்தான். அவங்க மேல ஏவுகணை தாக்குதல் நடத்தி எல்லாத்தையும் அழிச்சிட்டா, அதன்பின் மொக்கை படங்களும் சூப்பர் ஹிட் அடித்து விடும்" என்று இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பாணியில் விமர்சித்துள்ளார்.
வடிவேலுவின் பேச்சு குறித்து, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் விளக்கம் அளித்தார். "யூடியூப் விமர்சனங்களால் தமிழ் சினிமாவிற்குப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், ஒரு படத்தை நன்றாக எடுத்திருந்தால், எவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அந்தப் படம் வெற்றியை அடையும். ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரிப் படம் எடுக்க வேண்டியது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் பொறுப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில், ஒரு படத்தின் வெற்றிக்கு யூடியூப் விமர்சனங்கள் காரணமாக இருக்கிறதா அல்லது படத்தின் தரமே வெற்றியைத் தீர்மானிக்கிறதா என்ற விவாதம் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications