Puliyur Saroja: சீனிவாசனின் உடலை பார்த்து கதறி அழுத புலியூர் சரோஜா! 2வது இழப்பு! யார் இந்த நடிகர்?
சென்னை: பிரபல நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவர் நடிகர் சீனிவாசன் மரணமடைந்த நிலையில் அவர் யார் என்பதை பார்க்கலாம். சீனிவாசனுக்கு கடந்த சில தினங்களாக உடல்நல பாதிப்பு இருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று காலமானார்.

பழம் பெரும் நடிகர் சீனிவாசன் நடிகர் மட்டுமல்ல. எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர். இவர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் அறிமுகமானார். 1970, 1980களில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் இவர் துணை வேடத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், மனிதன், ஐயா, வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் அப்போது ரஜினி, கமல், ராதிகா, குஷ்பு என அனைத்து தரப்பினரையும் ஆட வைத்த டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாதான் சீனிவாசனின் மனைவி.
புலியூர் சரோஜாவும் சீனிவாசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் சத்யா இருந்தார். அவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் மரணமடைந்தார்.
இதையடுத்து ராமாபுரத்தில் மகன் சத்யா பெயரில் கல்வி நிறுவனங்களை உருவாக்கி கணவரும், மனைவியும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் 96 வயதாகும் சீனிவாசனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு இருந்தது.
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். அவருடைய மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீதிபதி பக்தவச்சலத்தின் உறவினர்தான் சீனிவாதன்.
இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது குடும்பம் விவசாய குடும்பம். சிறு வயது முதலே நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார். அதன்படி அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. அவரது நடிப்பில் ஒரு உயிரோட்டம் இருந்ததால் அவருக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்தனர்.
அவர் காலமானதை அடுத்து அவருடைய உடலை பார்த்து புலியூர் சரோஜா கதறி அழுதது அங்கிருந்தோரை கலங்கடித்தது. சீனிவாசனின் உடல் சென்னை அசோக் நகர் இந்திரா காலனியில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications