Bommukutty Ammavukku Serial: அடடா.. மத்தியானத்தையும் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்களே!
சென்னை: வர வர விஜய் டிவி மதிய நேரத்திலும் புது சீரியல்களை ஒளிபரப்பி சீரியல் ஆளுமை நேரத்தை அதிகரித்து வருகிறது. மறுமுறை ஒளிபரப்பு சீரியல்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இப்போது புதிய சீரியல்களை ஒளிபரப்பத் துவங்கி உள்ளது.
சன் டிவி காலையில் 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 3:30 முதல் மாலை 6:30 மணி இடைவேளைக்குப் பின் இரவு 10:30 வரை என்று வரிசையாக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.
ஜீ தமிழ் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி, விஜய் டிவி போன்ற மற்ற சானல்கள் பகல் நேர சீரியலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தாராமல்தான் இருந்தன. மறு ஒளிபரப்பில் மட்டுமே இந்த சானல்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தன.

விஜய் டிவி சீரியல்கள்,
விஜய் டிவியில் முதல் நாள் ஒளிபரப்பான சீரியல்கள் மட்டுமே மறுநாள் பகல் நேரத்தில் ஒளிபரப்பப்பட்டு வந்தன. முதல் நாள் பார்க்காதவர்கள் கூட மறுநாள் பகல் வேளையில் நிம்மதியாக தங்களுக்குப் பிடித்த சீரியல்களை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் மதிய நேரத்திலும் புது சீரியல்களை ஒளிபரப்பத் துவங்கி உள்ளது விஜய் டிவி.

தேன்மொழி பிஏ சீரியல்
விஜய் டிவியில் மதியம் 2:30 மணிக்கு தேன்மொழி பிஏ சீரியலை இரண்டாவது ஒளிபரப்பு என்றில்லாமல் புது சீரியலாக ஒளிபரப்ப ஆரம்பித்தது. இப்போது பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்று ஒரு புதிய சீரியலை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. இந்த சீரியல் விஜய் டிவியில் பிப்ரவரி 3ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.இதனால் விஜய் டிவியின் பிற்பகல் நேர சீரியல் இரண்டாக உள்ளது.

இரவு 10 மணிக்கு
இரவு நேர சீரியலுக்கான நேரத்தையும் நீட்டிக்கும் விதமாக 10 மணிக்கு ஒரு சீரியலை ஒளிபரப்ப உள்ளது விஜய் டிவி. அன்புடன் குஷி என்கிற இந்த சீரியல் இன்று இரவு 10 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் பலருக்கும் பிடித்த சீரியல் நடிகரான பிரஜன் நாயகனாக நடிப்பதால், சீரியல் ஆர்வலர்களை டிவி முன் கட்டிப்போட முடியும் என்று விஜய் டிவி நம்பிக்கை வைத்து செயல்படுகிறது.

போட்டிபோடும் சானல்கள்
தொலைக்காட்சி சானல்கள் பகல் இரவு என்று போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பத் துவங்கி உள்ளன.இதில் பல சானல்களில் மாலை நேர சீரியல்களுக்கு விளம்பரங்கள் வருவதே இல்லை. தங்களது ஹோம் விளம்பரங்களை வைத்து சானல்கள், சமாளித்து வருகின்றன. இப்படி இருக்கும் நிலையிலும் எதற்காக போட்டி என்றும், நஷ்டத்தை எவ்வாறு ஈடுகட்டுவார்கள் என்றும் நமக்கு தலைவலி தேவை இல்லாததுதான்.












Click it and Unblock the Notifications