இணையத்தை கலக்கும் "வில்லிசை மாதவி” வைத்த உருக்கமான வேண்டுகோள்.. இந்த மாதிரி பண்ணாதீங்க
சென்னை: கோவில் திருவிழாக்களில் பாடப்படும் வில்லுப்பாட்டு மூலம் இணையத்தில் பிரபலம் ஆகி வரும் மாதவி தற்போது ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இணையத்தில் ட்ரெண்டில் மாதவியின் வீடியோஸ் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இணையத்தில் இதுவரைக்கும் மாதவிக்கு ஒரு அக்கவுண்ட் கூட கிடையாதாம்.

ஆனாலும் தன்னுடைய வீடியோஸ்க்கு ஒரு சிலர் நெகட்டிவ் கருத்துக்கள் வெளியிட்டு வருவது குறித்து அவர் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சமீப காலமாகவே ஆரம்பத்தில் இருந்த பல கலைகள் இப்போது அழிந்து வருகிறது. அந்த வகையில் "வில்லிசை"யும் இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் கோவில் திருவிழாக்களில் வில்லுப்பாட்டுக்கு என்று தனியாக கூட்டம் அமர்ந்திருக்கும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இருப்பதில்லை. பெரும்பாலான கோவில் திருவிழாக்களில் வில்லுப்பாட்டு நடத்தப்படுவது கூட பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.
இந்த வில்லு பாடல் 80ஸ், 90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஆக இருக்கும் அந்த காலகட்டத்தில் வில்லிசை பாடல்கள் பாடுபவர்கள் தான் இவர்களின் கதாநாயகர்களாக கதாநாயகிகளாக இருப்பார்கள். கிராமத்தில் அந்த அளவிற்கு திரைப்படங்களும் வளர்ச்சி அடையாத காலகட்டங்களில் இவர்களால் பாடப்படும் இசை மற்றும் கதை தான் பலருக்கும் மனம் கவர்ந்ததாக இருக்கும். அப்படி இருந்த கலை தற்போது மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வில்லுப்பாட்டு கலையில் காலடி எடுத்து வைத்திருக்கும் 2k கிட்ஸ் ஆன மாதவி தற்போது பல கோவில்களில் வில்லுப்பாட்டு பாடி பிரபலம் அடைந்து வருகிறார். இவர் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான். இவருடைய தந்தை மாரிச்செல்வம் ஒரு கொத்தனாராக இருக்கிறார்.
அதுபோல அவருடைய தாய் மாலதி பீடி சுற்றும் வேலை பார்க்கிறார். இவருடைய வீட்டில் இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் இருக்கின்றனர். இந்த மாதிரி ஒரு குடும்ப பின்னணியில் இருந்து வந்த மாதவி அவருடைய வீட்டில் யாருமே வில்லிசை பாடாமல் இருந்த நிலையிலும் வில்லுப்பாட்டின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தால் அதை முறைப்படி கற்று தற்போது பல கோவில்களில் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக பாடிக் கொண்டிருக்கிறார். தற்போது 19 வயதே ஆன இந்த மாதவியின் பாடல் பல கோவில்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அதுபோல இவருடைய தெள்ளத் தெளிவான தமிழ் மற்றும் நகைச்சுவையான கதை அம்சம் கொண்ட வில்லுபாட்டை பலர் விரும்பி பார்த்து வருகின்றனர். பலர் அதை வீடியோக்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவருடைய வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக இருக்கிறது. "வில்லுப்பாட்டு மாதவி" என்று கூகுளில் சர்ச் செய்து பார்த்தால் கூட அங்கே ஆயிரக்கணக்கான வீடியோக்கள் கிடைக்கிறது. ஆனால் இவர் இதுவரைக்கும் எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் தனக்கென்று ஒரு ஐடி வைத்துக் கொண்டது இல்லை.
இந்த நிலையில் இவருடைய வீடியோக்களுக்கும் சிலர் நெகட்டிவ் ஆக கருத்துக்கள் வெளியிடடு வருகிறார்கள். அதிகமானோர் இவரை பாராட்டி கொண்டிருந்தாலும் ஒரு சிலர் நெகட்டிவ் கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அது குறித்து சமீபத்தில் மாதவி வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், நீங்க மனசார யோசித்து பார்த்து கமெண்ட் போடுங்க. உங்களுக்கு வீடியோ புடிச்சிருந்தா பாருங்க, இல்ல புடிக்கலையா அத ஃப்ரியா விட்டுருங்க. நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணல. நான் எந்த தப்பும் பண்ணல. நான் ஏதும் தவறாக பேசல. எனக்கு பிடிச்சத நான் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். நான் எந்த தவறானதையும் செய்யவில்லை.

என்னுடைய சந்தோஷத்துக்காக நான் வாழ்ந்துகிட்டு இருக்கிறேன். நல்லபடியா நான் பயணம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுல நீங்க தவறான வார்த்தைகளை போடாதீங்க. பிடிச்சிருந்தா நல்ல கமெண்ட்களை போடுங்க. பிடிக்கலைன்னா நீங்க அதை விட்டுருங்க. தவறா யாருக்கும் கமெண்ட் பண்ணாதீங்க, முடிஞ்சா நல்ல விஷயத்தை நாலு பேருக்கு பண்ணுங்க.
நாம நல்லது பண்ணுனா நமக்கு நல்லது நடக்கும். கெட்டதை பண்ணுனா திருப்பி நமக்கு கெட்டது தான் நடக்கும். அதனால நீங்க முடிஞ்ச வரைக்கும் நல்லது மட்டும் பண்ணுங்க. நீங்க எனக்கு மட்டும் இல்ல சோசியல் மீடியாவில, யூடியூப்ல யாருடைய வீடியோவுக்கும் தப்பா கமெண்ட் போடாதீங்க. அவங்கவங்க திறமைக்கு அவங்க உங்களுக்கு புடிச்சத செஞ்சுட்டு வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அது உங்களுக்கு பிடிக்கலை என்பதற்காக அவர்களை கஷ்டப்படுத்தாதீங்க என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். தற்போது இது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பல ரசிகர்கள் மாதவிக்கு ஆதரவாக அவருடைய வில்லுப்பாட்டு வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இந்த மாதிரி அழிந்து வரும் கலைகளை இப்போது உள்ள தலைமுறைகளுக்கு எடுத்து வரும் கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தற்போது இந்த வீடியோக்களும் அதிகமாக இணையத்தில் வலம் வருகிறது.












Click it and Unblock the Notifications