நூலிழையில் உயிர்தப்பிய நடிகர் ஜீவா! உதவாமல் வீடியோ எடுத்த ரசிகர்கள்.. கோபத்தில் அவர் கேட்ட கேள்வி
சென்னை: நடிகர் ஜீவா இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு தன் மனைவியோடு காரில் சென்று கொண்டிருந்தபோது கார் கள்ளக்குறிச்சி அருகில் வரும்போது திடீரென சாலையில் குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பிய போது கார் சாலையில் உருண்டு விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அப்போது ஜீவாவும் அவருடைய மனைவியும் நூலிழையில் உயிர் தப்பி இருக்கும் நிலையிலும் ரசிகர்கள் சூழ்ந்து நின்று அவரை வீடியோ எடுத்து தொந்தரவு செய்து இருக்கிறார்கள். அப்போது ஜீவா கோபத்தில் அவர்களை திட்டி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபலங்களாக இருந்தாலும் சரி சாதாரண மக்களாக இருந்தாலும் சரி ஒரு இடத்தில் விபத்து ஏற்பட்டு விட்டால் அந்த நபருக்கு உதவி செய்வதற்கு பலர் முன் வருவது கிடையாது. ஆனால் அந்த இடத்தில் நின்று கொண்டு வீடியோ எடுப்பதற்காகவும், செல்பி எடுப்பதற்காகவும் சிலர் அந்த இடத்தை சூழ்ந்து விடுகிறார்கள். அதனால் அடிபட்டதற்கு உண்மையாக உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களால் கூட ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை இருக்கிறது.
அதுதான் இன்று நடிகர் ஜீவா ஆக்சிடென்ட் ஆன இடத்திலும் நடந்திருக்கிறது. ஜீவாவின் கார் கட்டுப்பாட்டை மீறி சாலையில் உருண்டு அப்பளம் போல நொறுங்கி இருக்கும் போது கண்ணாடிகள் எல்லாம் உடைந்து காருக்குள்ளே சிதறி இருக்கிறது. உள்ளே மனைவி இருக்கிறார் என்ற பதைபதைபோடு ஜீவா தன்னுடைய மனைவியை வெளியே கூப்பிடுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும்போது சிலர் கார் கதவை திறக்க விடாதபடி சூழ்ந்து கொண்டு வீடியோ எடுத்து இருக்கிறார்கள்.
அதோடு ஒரு சிலர் சார் இங்க பாருங்க என்று அந்த வீடியோவுக்கு ஜீவாவை போஸ் கொடுக்கவும் சொல்லி இருக்கிறார்கள். இதை பார்த்து கடுப்பான ஜீவா இங்க எவ்வளவு பெரிய ஆக்சிடென்ட் நடந்திருக்கு? நாங்க உயிர் பிழைச்சதே பெருசு! நீங்க இந்த நேரத்துல வீடியோ எடுத்துட்டு இருக்கீங்களே என்று திட்டி இருக்கிறார். இதில் ஜீவா கோபமாக பேசியதை மட்டும் எடிட் செய்து சிலர் பரப்பி வருகிறார்கள்.
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கையில் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தெருவில் போகும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. சில நேரங்களில் நாம் கவனமாக இருந்தால் கூட மற்றவர்களின் அஜாக்கிரதையால் பல உயிர்கள் பரிதாபமாக போகிறது. சாலைகளில் போகும்போது கவனம் சாலையில் இருக்க வேண்டுமே தவிர குடும்ப பிரச்சனை, அடுத்து என்ன செய்யலாம் என்ற வீணான குழப்பங்களோடு சாலையில் செல்லக்கூடாது.
நம்முடைய சின்ன கவனக்குறைவால் தப்பே செய்யாதவர்களுக்கும் தண்டனை கொடுத்தது போல செய்து விடாதீர்கள். தற்போது மக்கள் தொகை பெருக்கத்தினால் சாலைகள் எவ்வளவு பெரியதாக மாற்றிக் கொண்டே இருந்தாலும் விபத்துக்கள் பெருக்கிக் கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே போன நம்முடைய உறவுகள் வீட்டிற்கு பத்திரமாக வரவேண்டும் என்று வீட்டில் குழந்தைகளும், மனைவி, அம்மா, அப்பா என்று பல சொந்தங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.
உங்களுக்காக மட்டுமல்ல உங்களை போல உங்களுக்கு எதிர் திசையில் வருபவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. நம்முடைய சின்ன கவனக்குறைவால் அடுத்தவர்களுடைய வாழ்க்கையையும் வீண்அடித்து விடாதீர்கள். அதுபோல தெருவில் யாரேனும் ஒருவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டால் முதலில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.
ஒருவேளை நீங்கள் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இன்னொருவர் உதவி செய்யும்போது அதில் போய் வீடியோ எடுத்து இடத்தை அடைத்துக் கொண்டு அவர்களுக்கு தொந்தரவாக இருக்காதீர்கள். உங்களுக்கு ஒரு போட்டோவோ அல்லது வீடியோவோ கிடைத்தால் அதை ஸ்டேட்டஸ் போட்டு லைக்குகளை வாங்க மட்டும்தான் முடியும். அதனால் ஆபத்தில் இருக்கும் உயிருக்கு உதவுங்கள். வீணாக கூட்டம் போட்டு விபத்தை சந்தித்தவர்களுக்கு மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.
ஜீவாவிற்கு ஆக்சிடென்ட் ஆன இடத்தில் சிலர் வீடியோ எடுத்தது போல ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கும்போது இதுபோன்று தொந்தரவு செய்பவர்கள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்க கருத்தை உரக்க சொல்லுங்க பாஸ் பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications