நல்லவனுக்கு நல்லவனில் வில்லன் ரோல்! ஏவிஎம் சரவணனிடமே நோ சொன்ன நடிகர் கார்த்திக்.. நடித்தது என்ன?
சென்னை: நல்லவனுக்கு நல்லவன் படத்தில் நடிகர் கார்த்திக்கை வில்லன் கேரக்டரில் நடிக்க வைத்தது எப்படி தெரியுமா? இயக்குநர், தயாரிப்பாளர்கள் கேட்டும் நடிகர் கார்த்திக் ஒப்புக் கொள்ளாத நிலையில் கடைசியில் ஒப்புக் கொண்டு நடித்தது எப்படி?
இதுகுறித்து செல்வன் அன்பு தனது பதிவில் கூறியிருப்பதாவது: 'நல்லவனுக்கு நல்லவன்' தொடங்கப்பட்ட போது நாயகன் ரஜினியை எதிர்க்கும் ஒரு இரண்டாவது நாயகக் கதாபாத்திரம் அதில் இருந்தது. அதில் ஒரு நாயக நடிகனையே நடிக்க வைக்க வேண்டும் என தீர்மானித்தார் எஸ்.பி.முத்துராமன்.

பல பெயர்களும் சொல்லப்பட்ட நிலையில் கடைசியில் கார்த்திக்கின் பெயர் வந்தது. கார்த்திக் நடிக்க வந்த பிறகு அலைகள் ஓய்வதில்லை படத்துக்குப் பிறகு பெரிய அளவில் பேசப்படும் படம் அமையவில்லை. பாரதிராஜாவே எடுத்த வாலிபமே வா வா, ராமநாராயணனின் கண்ணே ராதா, விசுவின் ராஜதந்திரம், பகவதிபுரம் ரயில்வே கேட், தாய் மூகாம்பிகை, தூரம் அதிகமில்லை, நினைவுகள், ஆயிரம் நிலவே வா என எல்லாமே சுமார் ரகம். கலைஞானத்தின் இளஞ்ஜோடிகள், தேவரின் அதிசயப் பிறவிகள் தப்பித்தது.
கார்த்திக்கும் தோல்விகளிலிருந்து மீண்டு வர ஒரு நல்ல படத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். இந்நிலையில் முத்துராமன் குழு 'நல்லவனுக்கு நல்லவன்' பட கதாபாத்திரத்தை சொல்லி கால்ஷீட் கேட்க கார்த்திக்கோ வில்லனாக நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டார். விஷயம் ஏவிஎம் சரவணன் காதுக்கு போக, முத்துராமன் "நீங்கள் தான் கார்த்திக்கிடம் சம்மதம் வாங்க வேண்டும்" எனச்சொல்ல, சரவணன் கார்த்திக்கை சந்திக்கிறார்.
சரவணனிடமும் கார்த்திக் மறுக்க, சரவணன் "இப்போ இந்தப் படத்தில் நடித்தால் எங்கள் நிறுவனத்தின் அடுத்தப் படத்தில் நீங்க தான் ஹீரோ. முத்துராமனே அதையும் இயக்குவார்" என தடாலடியாக ஆன் தி ஸ்பாட்டில் சொல்ல கார்த்திக் மறுப்பாரா என்ன?. அவரே ஒரு ஓப்பனிங்க்காக தானே காத்திருக்கிறார். அப்படி கார்த்திக் ரஜினியோடு நடித்த அந்த கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட்டது.
கார்த்திக் ரஜினியை அவமானப்படுத்தும் காட்சிகளிலெல்லாம் தியேட்டரில் அனல் பறந்தது. ஆனாலும் க்ளைமேக்சில் கார்த்திக் திருந்தி ரஜினியோடு சேர்ந்ததும் இந்த அனல் சமன் செய்யப்பட்டது. ரஜினியோடு மோதி ரஜினி ரசிகர்களிடம் திட்டு வாங்காத நடிகர் கார்த்திக் மட்டுமே. அவரின் தனித்திறமை தான் இதற்கும், அவர் மேல் ரசிகர்கள் வைத்த அபிமானமுமே காரணம்.
கார்த்திக்கிடம் சொன்ன மாதிரியே ஏவி.எம் சரவணன் கார்த்திக்கை வைத்து புதிய படம் எடுத்தார். அந்தப் புதிய படத்தை விட நல்லவனுக்கு நல்லவன் பாத்திரம் சிறப்பாக இருந்தது உண்மை. அப்படி கார்த்திக்கிடம் சொன்ன சொல்லுக்காக சரவணன் எடுத்தப் படம் தான் கார்த்திக், ராதா, அனுராதா நடித்த 'நல்ல தம்பி'. தோல்வி முகத்திலிருக்கும் கார்த்திக்கிடம் தடாலடியாக ஒரு புதிய படத்தையே சரவணன் அறிவிக்கிறாரென்றால் நிச்சயம் நல்லவனுக்கு நல்லவன் என்கிற நிச்சயிக்கப்பட்ட வெற்றியையும், அதில் கிடைக்கும் லாபத்தையும் வைத்து தானே.
ஒரு மினி பட்ஜெட் படமே ஏவிஎம்முக்கு எடுக்கும் அளவுக்கான லாபம் ரஜினிகாந்த் படத்தில் கிடைக்கப் பெற்றது என்கிற மறைமுக உண்மை இதில் இருக்கிறது என்பது தான் தனி ஸ்பெஷல். அது தான் ரஜினியின் மார்க்கெட் வேல்யூ... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications