"களம்" மாறும் கதைகள்! தமிழ் ஓடிடி சீரிஸ்களின் புதிய பரிமாணம்
சென்னை: தமிழ் ஓடிடி உலகம் தற்போது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை அல்லது வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு கதைகளை நகர்த்தும் சுவாரஸ்யமான கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. வழக்கமான மசாலா பட பாணியில் இருந்து விலகி, ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் கேமராவை வைத்து, அந்த இடத்தின் நுணுக்கங்களை கதையாக மாற்றுவது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான ரிசார்ட் சீரிஸ், ஹோட்டல் நிர்வாகப் பின்னணியை நகைச்சுவை கலந்த வாழ்வியலாகக் காட்டின. ஒரு ரிசார்ட்டுக்குள் வரும் விதவிதமான மனிதர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் அன்றாட சவால்கள் என அந்தத் தொடர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கதையை அழகாகக் கையாண்டிருந்தது. அதேபோல, மருத்துவமனையை ஒரு போர்க்களமாகச் சித்தரித்த 'ஹார்ட்பீட்' தொடர், மருத்துவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அவர்களின் சீருடைக்கு பின்னால் இருக்கும் போராட்டங்களுக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டைத் தொட்டது.

இந்த வரிசையில் கல்வியையும் சமூகத்தையும் இணைத்துப் பார்த்த 'அயலி', ஒரு குக்கிராமத்தின் பழமைவாதச் சடங்குகளுக்கு எதிராக ஒரு பள்ளி மாணவி எடுக்கும் விஸ்வரூபத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்தது. பள்ளி வகுப்பறைகளும், ஊர் மந்தைகளும் வெறும் காட்சிகளாக இல்லாமல் கதையின் அங்கமாகவே மாறியிருந்தன.
இதற்கு நேர்மாறாக, ஒரு பரபரப்பான நகரத்தின் இதயத் துடிப்பாக இருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டை மையமாக வைத்து வெளியான 'கோலி சோடா: ரைசிங்', ஆசியாவிலேயே மிகப்பெரிய அந்தச் சந்தைக்குள் நடக்கும் அதிகாரப் போட்டிகளையும், அங்கு நிலவும் ஒருவிதமான 'மார்க்கெட் நீதி'யையும் ஆக்ஷன் கலந்த விறுவிறுப்புடன் காட்சிப்படுத்தியது.
துப்பறியும் கதைகளைப் பொறுத்தவரை, 'விலங்கு' தொடர் ஒரு கிராமப்புற காவல் நிலையத்தின் ஸ்லோவான, ஆனால் ஆபத்து நிறைந்த சூழலை அப்படியே கண்முன் நிறுத்தியது. பெரிய நகரத்து பளபளக்கும் போலீஸ் நிலையங்கள் இல்லாமல், அழுக்கான கோப்புகள் மற்றும் டீ கிளாஸ்களுக்கு நடுவே நடக்கும் புத்திசாலித்தனமான குற்ற விசாரணை அது.
இதே பாணியில் மலைப்பிரதேசத்தின் அமைதியையும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் வதந்திகளையும் மையமாகக் கொண்ட 'வதந்தி' மற்றும் மலைப் பிரதேச சிமெண்ட் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலைப் பேசிய 'சுழல்' ஆகிய தொடர்கள் நிலப்பரப்பையே ஒரு கதாபாத்திரமாக மாற்றின.
நவீன இளைஞர்களின் உலகைப் பிரதிபலித்த 'மீம் பாய்ஸ்' மற்றும் 'ட்ரிப்பிள்ஸ்' போன்ற தொடர்கள், முறையே மீம் கிரியேட்டர்களின் கற்பனை உலகம் மற்றும் வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்தைப் பின்னணியாகக் கொண்டிருந்தன.
அரசியல் சதுரங்கத்தை ரத்தமும் சதையுமாகப் பார்க்க விரும்பியவர்களுக்கு 'தலைமைச் செயலகம்' தொடர் கோட்டைக்குள் நடக்கும் அதிகாரப் போட்டிகளை மிக நெருக்கமாகக் காட்டியது. இவ்வாறு, ஒவ்வொரு தொடரும் ஒரு தனித்துவமான உலகத்தை (World Building) உருவாக்கி, அந்தச் சூழலுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்வது தமிழ் ஓடிடி தளங்களின் ஆரோக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. இது வழக்கமான டிவி சீரியல்களில் இருந்து மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது.












Click it and Unblock the Notifications