வீட்டு வேலை செய்து.. 63 வயதில் கிடைத்த பாடகி வாய்ப்பு.. ராக்ஸ்டார் ரமணி அம்மாளின் தெரியாத சோகக்கதை
சென்னை: ஜீ தமிழ் சரிகமப சீனியர்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த பாடகி ரமணியம்மாள் இன்று வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்து இருக்கிறார்.
ரமணி அம்மாள் சிறு வயதிலிருந்து வறுமையில் வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு 63 வயதில் தான் தன்னுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க தொடங்கியது.
ரமணி அம்மாள் சின்ன வயதிலிருந்து வீட்டு வேலை செய்துதான் குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார்.

ஏழ்மையான குடும்பம்
நாம் பலரும் எங்களுக்கான வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மனம் சோர்ந்து இருக்கிறோம் ஆனால் அதற்கான நேரம் வரும்போது சரியாக கிடைக்குமானால் அதற்கான முயற்சியை நாம் விட்டு விடவே கூடாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தான் ராக்ஸ்டார் ரமணியம்மா வாழ்ந்து வந்தார். இவர் தமிழ்நாட்டின் சென்னையின் மேற்கு மாம்பலத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்த ரமணி அம்மாள், குடும்பத்தில் இருந்த கஷ்டத்தின் காரணமாக படிப்பை தியாகம் செய்ய வேண்டி இருந்திருக்கிறது. என்னதான் வீட்டில் கஷ்டங்கள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தாலும் நமக்கு என்று ஆசையும் கனவும் இல்லாமலா இருக்கும். அந்த மாதிரி தான் ரமணி அம்மாவுக்கு பாட்டின் மீது தீராத காதல் இருந்திருக்கிறது.

வீட்டு வேலை செய்தல்
இப்போ உள்ள குழந்தைகள் தங்களுடைய ஆசையை பெற்றோரிடம் தெரிவித்தாலே அவர்களுக்கு பிடித்த துறைகளில் சாதிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் அந்த மாதிரி எல்லாம் கிடையாது. இங்க சாப்பாட்டுக்கே கஷ்டமான இருக்கும் நேரத்தில் இவர் பாட்டு பாடனும் என்று ஆசைப்பட்டால் அதற்கு என்ன செய்ய முடியும்..? வீட்டில் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டில் கஷ்டத்திற்காக இவர் வீட்டு வேலைக்கார பெண்ணாக வேலை செய்து இருக்கிறார்.

முதல் வாய்ப்பு
மனதில் இருக்கும் பெரும் ஆசைக்காக இவர் திருமண விழாக்களிலும், கோவில் திருவிழாக்களிலும் பாட்டு பாடி வந்திருக்கிறார். முதல் வாய்ப்பு இவருக்கு கிடைக்க வருவதற்கு முன்பு முழுமையாக இவர் வீட்டு வேலை செய்துதான் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்திருக்கிறார். முதல் முதலாக 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் இவர் ஒரு பாடகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சந்தியா வயதிற்கு வந்தபோது வரும், "தங்கச்சி கருப்பாயி" எனும் பாடலில் மூலமாக இவர் பலருடைய மனதை கவர்ந்திருக்கிறார்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்
முதல் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் அடுத்ததாக காத்தவராயன், தெனாவட்டு, ஹரிதாஸ் என ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் வீடு ஆன்மீக குரு அடிகளாரின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் நடத்திய இசை நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு பாட்டு பாடி இருக்கிறார். பாட்டு பாடும்போது கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியாது என்பதற்காக மீண்டும் இவர் வீட்டு வேலைகளையும் செய்து கொண்டிருந்திருக்கிறார்.

ராக்ஸ்டார் ஆக மாற்றம்
அந்த நிலையில் தான் இவருக்கு 2017 ஆம் ஆண்டில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப சீனியர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளும்போது இவருடைய வயது 63.. பல இளம் போட்டியாளர்கள் முறைப்படி சங்கீதத்தை கற்று பல வருடங்களாக அதில் ஊறிப் போய் இருந்த நிலையில், அவர்களோடு போட்டி போட்டு என்னுடைய திறமையும் விடாமுயற்சியும் பெரியது என்பதை அந்த நிகழ்ச்சியில் அவர் காட்டினார். அதனால்தான் அவருக்கு அந்த நிகழ்ச்சியில் ராக்ஸ்டார் ரமணி அம்மாள் என்று நடுவர்கள் பட்டம் கொடுத்தனர். அந்த நிகழ்ச்சியில் முதல் இடத்தை பிடித்து வெற்றியும் பெற்றார்.

மறையாத தன்னம்பிக்கை
சரிகமப சீனியர்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு பிறகு ரமணி அம்மாவுக்கு ஜூங்கா, சண்டக்கோழி, காப்பான் என ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அப்போது இவர் இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார். அதற்கு பிறகு தன்னுடைய வயது மூப்பு காரணமாக அதிகமாக வெளியே செல்ல முடியாமல் இருந்த நிலையில் இன்று காலமாகி இருக்கிறார். இவர் மறைந்தாலும் இவருடைய வைராக்கியமும், முயற்சியும் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் தான் இருக்கிறது. எத்தனையோ பேர் ஒரு மார்க் பரீட்சையில் இல்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள். சின்ன சின்ன தோல்விகளுக்கும் துவண்டு போகிறார்கள் ஆனால் இவர் தன்னுடைய விடாமுயற்சியால் 63 ஆவது வயதில் தான் இவர் வெற்றி படியில் காலடி எடுத்து வைத்திருந்தார். இந்த மாதிரி நாம் எவ்வளவு கஷ்டங்கள் வந்து கொண்டு இருந்தாலும், முயற்சி விடாமல் செய்து கொண்டிருந்தால் கண்டிப்பா ஒரு நாள் ஜெயித்து விடலாம் என்பதற்கு மறைந்தாலும் பாடல்களால் வலம் வரும் ரமணியம்மாவின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு தான்.












Click it and Unblock the Notifications