மலைப்பாம்பை பிடித்து.. ‛சுக்கா' சமைத்து சாப்பிட்ட 2 பேர்.. அதிர வைத்த சேட்டன்கள்
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் மாவட்ட வனப்பகுதியில் மலைப்பாம்பை பிடித்து கொன்று ‛சுக்கா' சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மலைப்பாம்பு சமையல் பறிமுதல் செய்யப்பட்டது.
நாம் அனைவரும் ‛மட்டன் சுக்கா' சாப்பிட்டு இருப்போம். ஆனால் மலைப்பாம்பு சுக்கா? கேள்வி பட்டு இருக்கீங்களா.. என்னது மலைப்பாம்பு சுக்காவா? என்று நீங்கள் வியந்து கேட்பது தெரிகிறது. ஆம் உண்மை தான்.
மலைப்பாம்பு சுக்காவை நாம் கேள்வி கூட பட்டது இல்லை. ஆனால் கேரளாவில் 2 பேர் மலைப்பாம்பை பிடித்து அதனை ‛சுக்கா' சமைத்து சாப்பிட்டு உள்ளனர்.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் இவர்கள் விதிவிலக்கு போல. மலைப்பாம்பை தேடிப்பிடித்து கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கேரளா.. நம் தமிழ்நாட்டுக்கும், அந்த மாநிலத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மரங்கள், மலைகள் நிறைந்த இடம் தான் கேரளா. இதனால் ஏராளமான வனவிலங்குகள் அங்கு வசிக்கின்றன. குறிப்பாக மலைகளில் ஆங்காங்கே மலைப்பாம்புகள் உள்ளன. இந்நிலையில் தான் கண்ணூர் மாவட்டம் பன்னபுழா அருகே மலைப்பாம்பை வேட்டையாடி சிலர் சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் சென்றது.
இதையடுத்து தாலிபரம்பா ரேஞ்ச் வனத்துறை அதிகாரி சனூப் கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்றனர். அப்போது பன்னபுழா வனப்பகுதியில் 2 பேர் சமையல் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது திடுக்கிட வைக்கும் தகவல் தெரியவந்தது.
வனத்துறை விசாரணையில் அவர்கள் பிரமோத் (வயது 40), பினீஷ் (37) ஆகியோர் என்பதும், இருவரும் பனபுழா முண்டபிராமை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதோடு அவர்கள் மலைப்பாம்பை பிடித்து ‛சுக்கா' சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்கள் சமைத்து வைத்திருந்த மலைப்பாம்பு சுக்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. மலைப்பாம்பு என்பது தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அட்டவணை 1ல் இடம்பெற்றுள்ளது. இப்படியான சூழலில் தான் இருவரும் மலைப்பாம்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications