காதலர் தினத்தில் சீனியர்களுடன் டான்ஸ்.. கட்டம் கட்டி ராகிங்.. பறிபோன மாணவர் உயிர்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக இந்திய மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 4 பேர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயபிரகாஷ். இவருடைய மகன் சித்தார்த்தன் (20). இவர் வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் கடந்த 18ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் அதில் சித்தார்த்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.
ஆனால் அவருடைய உடலில் யாரோ இரும்பு ராடாலோ அல்லது செவ்வக வடிவ பொருளாலோ தாக்கியதற்கான காயங்கள் இருப்பதாகவும், இந்த தாக்குதல் சித்தார்த்தன் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு ஏற்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணையில் அந்த மாணவருக்கு ராகிங் கொடுமை நடந்தது தெரியவந்தது.
காதலர் தினம்: அதாவது காதலர் தினத்தன்று அந்த கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவிகளுடன் சித்தார்த்தன் நடனமாடினார். இதனால் கோபமடைந்த 18 மாணவர்கள் சித்தார்த்தனை கடுமையாக தாக்கி சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீஸார், ராகிங் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் 18 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த 18 பேரில் 5 பேர் சித்தார்த்தனுடன் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். 4 பேர் இந்திய மாணவர் கூட்டமைப்பின் நிர்வாகிகள். இதுவரை 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரை தேடி வருகிறார்கள். இதுகுறித்து சித்தார்த்தனின் தந்தை ஜெயபிரகாஷ் கூறுகையில், என் மகன் நன்றாக படிக்கக் கூடியவர். இது போன்ற ஒரு முடிவை அவர் எடுத்திருக்கவே மாட்டார்.
கால்நடை படிப்பு: விலங்குகள் மீது அவருக்கு இருந்த அன்பின் காரணமாகவே கால்நடை தொடர்புடைய படிப்பை தேர்வு செய்திருந்தார். இந்த படிப்பை முடித்துவிட்டு உயர் கல்வி படிக்கவும் முடிவு செய்திருந்தார். இதனால் அவருடைய வகுப்பு மாணவர்கள் சிலருக்கு சித்தார்த்தன் மீது பொறாமை இருந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தலைவரிடம் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். அது போல் விடுதி வார்டனுக்கு தெரியாமல் என் மகன் இத்தகைய அளவுக்கு துன்புறுத்தப்பட்டிருக்க மாட்டார். எனவே அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
நடனமாடிய சித்தார்த்தன்: இதுகுறித்து சித்தார்த்தின் மாமா ஷிபு கூறுகையில் காதலர் தினத்தன்று சித்தார்த்தன் மூத்த மாணவிகளுடன் நடனமாடியதால் அவரை மூத்த மாணவர்கள் துன்புறுத்தியதாக சித்தார்த்துடன் படித்த மாணவர்கள் எங்களுக்கு போனில் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் வகுப்பு இல்லை என்பதால் சித்தார்த்தன் கல்லூரி வளாகத்திலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டிற்கு ரயில் மூலம் வந்து கொண்டிருந்தார்.
பிராஜெக்ட்: கடந்த 15 ஆம் தேதி இரவு அவர் ரயில் வரும் போது அவருடன் படித்த மாணவர் ஒருவர் சித்தார்த்தனுக்கு போன் செய்து மீண்டும் கல்லூரிக்கு வருமாறு அழைத்துள்ளார். அடுத்த நாள் அதாவது 16 ஆம் தேதி ஒரு பிராஜெக்ட்டை சப்மிட் செய்ய வேண்டும் என்பதால் சித்தார்த்தனை அழைத்துள்ளார். இதனால் கொச்சியில் இறங்கிய சித்தார்த்தன் அன்று இரவே கல்லூரி வளாகத்திற்கு சென்றார்.
இதனிடையே தான் வீட்டுக்கு வருவதாக கூறிய நிலையில் சித்தார்த்தன் வராததால் அவருடைய தாய் போன் செய்து கேட்ட போது தான் கல்லூரிக்கே திரும்பிச் சென்றுவிட்டதாக சொல்லியுள்ளார். பிறகு சித்தார்த்தன் கல்லூரி வளாகத்திற்கு சென்றதும் அவரை சில மாணவர்கள் பெல்ட் மூலம் கடுமையாக தாக்கினர். சுமார் 2 நாட்களாக இந்த தாக்குதல் நடந்தது.
துன்புறுத்தல்: பிறகு சித்தார்த்தனை ஒரு அறையில் அடைத்து வைத்து உணவு கூட கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளனர். அவருடைய தாய் போன் செய்த போது கூட அந்த போன் காலை சித்தார்த்தனை எடுக்க விடவில்லை. பிறகு ஏதாவது பிரச்சினை வந்துவிடும் என்ற அச்சத்தில் சித்தார்த்தனை தாயுடன் பேச வைத்தனர்.
கொலை: அப்போது கூட இங்கு நடப்பதை சொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் போன் பேச அனுமதித்தனர். தாயிடம் பேசுகையில் தனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. தான் மீண்டும் போனில் பேசுகிறேன் என கூறினார். அதன்பிறகுதான் சித்தார்த்தன் மரணமடைந்த செய்தி எங்களுக்கு கிடைத்தது. சித்தார்த்தனை துன்புறுத்தியதால் அவருடைய உடல் மோசமடைந்த நிலையில் மாணவர்களே அவரை தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என நாங்கள் சந்தேகப்படுகிறோம். அந்த கொலையை அவர்கள் தற்கொலையாக மாற்ற அவர்கள் நினைத்து அது போல் செய்துள்ளனர். அந்த வளாகத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்களை கண்டாலே மற்ற மாணவர்களுக்கு அச்சம். யாரும் அவர்கள் செய்யும் அராஜகம் குறித்து பேச முன் வரமாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications