வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழப்பு.. 25 தமிழர்கள் மாயம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், இருப்பிடம், உடமைகள் என அனைத்தையும் இழந்துள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 25 தமிழர்கள் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பேய் மழை கடந்த 29ம் தேதி கொட்டித் தீர்த்தது. அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலமும், சடலங்களுமே தென்படுகின்றன.

சூரல்மலை - முண்டக்கை இடையேயான பாலம் உடைந்ததால் வெள்ளத்தைக் கடந்து ராணுவம், பேரிடர் மீட்புப் படையினரால் நிலச்சரிவு ஏற்பட்ட மலைக்கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சூரல்மலை, முண்டக்கையின் ஒரு பகுதியில் மட்டுமே மீட்புப் பணியில் ஈடுபட முடிந்தது. இதையடுத்து, ராணுவத்தினர் தற்காலிக பெய்லி பாலத்தை இரவு, பகலாக அமைத்து அவ்வழியாக மீட்பு வாகனங்களில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, இன்று 5வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மலைப் பகுதிகளில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மற்றும் மோப்பநாய்களின் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தமிழர்கள் இங்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 4 நாள்களாக அப்பகுதியில் உள்ள முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, கேட்டறிந்து வருகின்றனர். தமிழர்களுக்கான உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கியிருந்த 130 தமிழர்கள் மீட்கப்பட்டு தற்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு வயநாட்டில் குடியேறி வசித்து வரும் 21 தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வேலை நிமித்தமாக வயநாடு சென்ற 3 தமிழர்கள் என 24 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணிக்காக வயநாடு சென்ற 3 பேர் மற்றும் வயநாட்டிலேயே குடியேறி வசித்து வரும் 22 பேர் என 25 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications