கோயில் விழாவில் மிரண்டு ஓடிய யானை தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு.. கேரளாவில் மீண்டும் ஷாக் சம்பவம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் நடைபெற்ற திருவிழாவிற்கு யானைகள் அழைத்து வரப்பட்டன. கோயில் விழாவில் பட்டாசு வெடித்ததால் யானைகள் மிரண்டு ஓடின. இதில் ஒரு யானை தாக்கியதில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குருவங்கட் என்ற இடத்தில் மனக்குளங்கரை பகவதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். திருவிழாவின் போது வாணவேடிக்கையும் நடைபெற்றது.

வெடிச்சத்தம் அதிகமாக இருந்ததால், அங்கு ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் மிரண்டு ஓடின. இரண்டு யானைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிலையில், பக்தர்கள் நின்று கொண்டிருந்த பகுதியை நோக்கி ஒரு யானை திடீரென ஓடியது. இதனால் பீதி அடைந்த பக்தர்கள் நாலாபுறமும் பதறியடித்துக்கொண்டு சிதறி ஓடினர். அப்போது யானை ஒன்று தாக்கியதில், 3 பேர் உயிரிழந்தனர். 36 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
மிரண்டு ஓடிய யானைகளை அரை மணி நேரத்திற்கு பிறகு யானை பாகன்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். யானை தாக்கியதில் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணப்பட்டது. லீலா (வயது 65), அம்முகுட்டி அம்மா (70) மற்றும் ராஜன் என அடையாளம் காணப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கோயிலின் நிர்வாக அலுவலக கட்டிடத்தையும் யானை முட்டி தள்ளியுள்ளது. இதில், அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
கோயில் திருவிழாவில் யானை மிரண்டு ஓடிய காட்சிகளை அங்கிருந்த பக்தர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோயிலாண்டி நகராட்சி துணை சேர்மன் கே சத்யன் கூறியதாவது:- யானை தாக்கியதில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனயில் வைக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயரும் எனத்தெரிகிறது" என்றனர். கேரளாவில் ஏற்கனவே இதேபோன்று ஒரு சம்பவம் நடந்த நிலையில் தற்போது மீண்டும் நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications