விடாமல் துரத்தும் யானை தந்தம் வழக்கு.. நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மலையாள நடிகர் மோகன்லால்!
திருவனந்தபுரம்: யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் மலையாள நடிகர் மோகன்லால் ஆஜராகிறார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து இன்று அவர் ஆஜராகிறார்.
கேரளாவில் நடிகர் மோகன்லாலுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் கடந்த 2012ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போதுதான் யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அனைத்தும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறை, மோகன்லாலுக்கு யானை தந்தம் கொடுத்ததாக திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அப்போதிருந்த அமைச்சரிடத்தில் மோகன்லால் யானை தந்தம் குறித்து கோரிக்கையை வைத்திருந்தார். எனவே சட்ட விதிகள் திருத்தப்பட்டு தந்தம் மீண்டும் மோகன்லால் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் வனத்துறையும் இந்த வழக்கிலிருந்து விலகியது. இப்படி இருக்கையில் பவுலோஸ் என்பவர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில், யானை தந்தம் மோகன்லால் வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போதுதான், தன்னிடம் இருக்கும் யானை தந்தத்திற்கு உரிய அனுமதி இருக்கிறது. தந்த்திற்காக எந்த யானையும் கொல்லப்படவில்லை, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மோகன்லால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் கேரள உயர்நீதிமன்றத்தை நாடினார். அங்கும், மேற்குறிப்பிட்ட காரணத்தை கூறி வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரித்த பெரும்பாவூர் நீதிமன்றம், இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என மோகன்லாலுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.












Click it and Unblock the Notifications