“மகள்” என்று அழைத்து.. ஹோட்டலில் பாலியல் பலாத்காரம்.. நடிகை புகாரில் சித்திக் மீது வழக்கு பதிவு!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஸ்கட் ஹோட்டலில் 2016 ஆம் ஆண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ரேவதி சம்பத் அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணை செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சமீபத்தில் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அந்த அறிக்கையில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது உண்மைதான் என்று தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக ஒரு சில நடிகைகள், மலையாள திரையுலகின் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில், மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர்கள், சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன.
மலையாள நடிகர்கள் மீதான பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க அம்மா சங்கம் கூடுவதாக இருந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தது மலையாள திரையுலகிரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்த நடிகர் சித்திக், தன் மீதான பாலியல் புகார்களை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்தார். சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த மலையாள நடிகர் சித்திக், கடந்த 2016 ஆம் ஆண்டு, தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். தான் ப்ளஸ் டூ முடித்த பிறகு சித்திக் என்னை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டார் என்றும், தன்னை "மோள்" (அதாவது மகள் எனப் பொருள்படும் மலையாளச் சொல்) என்று அழைத்து சுகமாயிரிகட்டே படத்தின் முன்னோட்ட திரையிடலின் போது, மஸ்கட் நட்சத்திர விடுதிக்கு விவாதத்திற்கு அழைத்தார் என்றும் அவர் புகாரில் தெரிவித்தார்.
மஸ்கட் ஹோட்டலுக்குச் சென்ற தன்னிடம் நடிகர் சித்திக், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவரால் மன நலனையும், கனவுகளையும் இழந்தேன் என்று அவர் புகாரில் தெரிவித்தார். இந்நிலையில், மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், சித்திக் மீது நடிகை ரேவதி சம்பத் அளித்த புகாரின் பேரில், சித்திக் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஸ்கட் ஹோட்டலில் 2016 ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக ரேவதி சம்பத் அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூத்த மலையாள நடிகர் சித்திக் மீது கற்பழிப்பு உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை ரேவதி சம்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே நடிகர் சித்திக், தன் மீது பாலியல் புகார் கூறிய துணை நடிகை ரேவதி சம்பத் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள் நோக்கம் இருப்பதாகவும் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கேரள டிஜிபியிடம் அவர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications