12 மணி நேரத்தில் 38 ஆயிரம் பேர்.. காட்டிக்கொடுத்த ஏஐ கேமரா.. நெளியும் சேட்டன்கள்.. ஓ இதுதான் விஷயமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க புதிய நடைமுறையை அந்த மாநில அரசு கையாண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம் விதி மீறும் வாகன ஓட்டிகள் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
விபத்துக்களுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது போக்குவரத்து விதி மீறல்களாகத்தான் உள்ளது. எனவே போக்குவரத்து விதி மீறலை கட்டுப்படுத்தி விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து விதி மீறல்களை குறைக்க மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பிடிப்பதற்காக புதிய நடைமுறையை அம்மாநில போக்குவரத்து துறை கையாள தொடங்கியுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மாநிலம் முழுவதும் 726 இடங்களில் இந்த கேமராக்கள் உள்ளன.
சோலார் மின்சக்தி மூலம் இயங்கும் இந்த கேமராக்கள் 4 ஜி இணயவசதி உதவியுடன் தரவுகளை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடும். அதாவது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வது, செல்போனில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுவது, காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, சிக்னல் ஜம்பிங் செய்வது, அதிவேகத்தில் செல்வது உள்ளிட்ட சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை இனி போலீசார் மறித்து அபராதம் போட மாட்டார்கள்.
விதி மீறும் பயணிகள் இந்த கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும் அபராதம் விதிக்கப்படாமல் வெறும் வார்னிங் மட்டும் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 5) முதல் செயற்கை நுண்ணறிவு கேமராவை பயன்படுத்தி அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள், சிக்னலில் வெள்ளைக் கோட்டை தாண்டி நிற்பவர்கள் என ஒரு விதி மீறலும் பயணிகள் ஈடுபட்டாலும் நேரடியாக ஏஐ கேமரா காட்டி கொடுத்து விடும்.

ஏ.ஐ கேமரா மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை கேரளாவில் அமலுக்கு வந்த முதல் 12 மணி நேரத்திற்குள் 38 ஆயிரத்து 520 வாகன ஓட்டிகள் சிக்கியுள்ளனர். அதிகபட்சமாக கொல்லத்தில் 4,778 வாகன ஓட்டிகளுக்கு செல்லான்கள் பதிவு ஆகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக திருவனந்தபுரத்தில் (4,362) திரிசூரில் (3,995) கண்ணூரில் (2,437 ) கோட்டயத்தில் (2,194) பாலக்காட்டில் (1,007), காசர்கோட்டில் (1,040) மலப்புரம் 545 விதி மீறல்களும் பதிவாகியுள்ளன. அமல்படுத்திய 12 மணி நேரத்தில் 38 ஆயிரம் போக்குவரத்து விதி மீறல்கள் பதிவாகியிருப்பது கேரளவில் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications