அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்'
திருவனந்தபுரம்: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அண்ணாமலை கேட்டு கொண்டதன் அடிப்படையில் அவருக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலையொட்டி அண்ணாமலை பாஜக புதிய அசைன்மென்ட் வழங்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள் இன்று வெளியானது.

அதன்படி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதி, மத்திய இணையமைச்சர் எல் முருகன் அவிநாசி, வானதி சீனிவாசன் கோவை வடக்கு, தமிழிசை சவுந்தரராஜன் மயிலாப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அண்ணாமலைக்கு புதிய பணி
இந்நிலையில் தான் தேர்தலையொட்டி அண்ணாமலைக்கு பாஜக புதிய பணியை வழங்கி உள்ளது. இதனை அண்ணாமலை உறுதி செய்துள்ளார். இன்று அண்ணாமலை கேரளா மாநிலம் கண்ணூரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சமயத்தில் அவரிடம், ''தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு கட்சி வாய்ப்பு வழங்கவில்லையே'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அண்ணாமலைக்கு என்ன பணி?
அதற்கு அண்ணாமலை, ''நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கட்சியிடம் தெரிவித்தேன். கட்சி என்னை தேர்தல் பிரசாரம் செய்ய கூறியது. இந்த தேர்தலில் எனது பணி என்பது தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்வது தான். இப்போது கேரளா, புதுச்சேரியில் பிரசாரம் செய்யும் பணியை கட்சி வழங்கி உள்ளது.
இந்த பிரசார பணி வரும் 7 ம் தேதி வரை இருக்கும். அதன்பிறகு ஏப்ரல் 23ம் தேதி வரை தமிழ்நாட்டில் பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனே். கட்சி எனக்கு கொடுத்துள்ள பொறுப்பு இதுதான். இந்த பொறுப்பை நான் நிறைவேற்றி கொடுப்பேன்'' என்றார். இதன்மூலம் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ஏப்ரல் 7 ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது.
உறுதி செய்த பியூஷ் கோயல்
முன்னதாக சென்னையில் பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில், அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிய பியூஷ் கோயல், தமிழ்நாடு முழுக்க தேர்தல் பணியாற்ற அண்ணாமலை விரும்புவதாக கூறியிருந்தார். இதன்மூலம் அண்ணாமலைக்கு கொடுத்த அசைன்மென்ட்டை பியூஷ் கோயல் உறுதி செய்துள்ளார்.
மோடி கூட்டத்தில் நாளை பங்கேற்பு
அதோடு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். இன்று பிற்பகலில் சென்னை வந்த பிரதமர் மோடி புதுச்சேரியில் வாகன பேரணியை முடித்தார். பிறகு மீண்டும் சென்னை வந்து தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுத்து வருகிறார். நாளை பாஜகவின் தேர்தல் மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அண்ணமலைக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், எல் முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை வெல்ல வைப்பதற்கான வியூகம், பிரசாரங்கள் குறித்து பிரதமர் மோடி முக்கிய அறிவுரைகளை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications