நடக்க கஷ்டப்பட்ட சிறுமி! டக்கென யோசிக்காமல் குனிந்து செருப்பை சரி செய்த ராகுல்.. நெகிழ்ச்சி சம்பவம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ராகுல் காந்தி இப்போது நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு ராகுல் காந்தியின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகள் இருந்தாலும், அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன.
பாஜகவுக்கு எதிராக இருக்கும் அனைத்து செய்தியாளர்களையும் ஒரே அணியில் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

காங்கிரஸ்
மறுபுறம் காங்கிரசுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். இது பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட பயன்படுத்தும் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செப். 31ஆம் தேதி இந்தப் பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. இதனை முதல்வர் ஸ்டாலின் குமரியில் தொடங்கி வைத்தார்.

பாத யாத்திரை
மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடையும்படி திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாத யாத்திரை முடிந்துள்ள நிலையில், அடுத்து கேரளாவில் பாத யாத்திரையை ராகுல் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை தொடங்கியது முதலே, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நல்ல எழுச்சி ஏற்பட்டு உள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

கேரளா
காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகக் கேரளா உள்ளது. இதனால் அங்குப் பல மாவட்டங்களில் தொடர்ந்து பாத யாத்திரை சென்று வருகிறார். 11ஆவது நாளான இன்று ஆலப்புழா மாவட்டத்தில் ராகுல் காந்தி பாத யாத்திரை சென்றுள்ளார். அவருடன் பல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் நடைப்பயணம் சென்று கொண்டு இருந்தனர்.

காலணி
அப்போது காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தனது குழந்தையையும் பாத யாத்திரைக்கு அழைத்து வந்து இருந்தார். ராகுல் காந்தி அருகே அவர்கள் பாத யாத்திரை சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த சிறுமி சரியாக நடக்க முடியாமல் அவதிப்படுவதைப் பார்த்த ராகுல் காந்தி, அவரே அந்த சிறுமியின் காலணியைச் சரி செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

வீடியோ
அந்த வீடியோவில் சிறுமி சரியாக நடக்க முடியாமல் அவதிப்படுவதைப் பார்த்த ராகுல் காந்தி, அவரது தந்தையிடம் அச்சிறுமி அணிந்திருந்த காலணியில் சரியாக இல்லை எனக் கூறுகிறார். பின்னர் துளியும் யோசிக்காமல் அவரே சிறுமியின் காலணியைச் சரி செய்கிறார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. நெட்டிசன்கள் பலரும் ராகுல் காந்தியின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

அடுத்து
இந்த பாத யாத்திரையில் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி 150 நாட்களில் மொத்தம் 3500 கிமீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 12 மாநிலங்கள் வழியாக அவர் செல்ல உள்ள நிலையில், கேரளாவில் மட்டும் 18 நாட்களுக்குப் பாத யாத்திரை செல்கிறார். அடுத்து செப்டம்பர் 30இல் கர்நாடகா செல்லும் அவர், சுமார் 21 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் செல்கிறார்.












Click it and Unblock the Notifications