கேரளாவை அலறவிடும் மூளையைத் தின்னும் அமீபா.. தொடரும் உயிர் பலிகள்.. நீர்நிலைகளில் ரொம்ப கவனம்
சென்னை: கேரள மாநிலத்தில் பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று காரணமாக தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் இந்த தொற்று காரணமாக மூன்று பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், இந்த தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பரவி வருகிறது. இதனால், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. Naegleria fowleri என்ற இந்த அமீபா மூளையை அப்படியே மெல்ல தின்றுவிடும். ஏற்கனவே கேரளாவில் இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு தாமரச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி உயிரிழந்தார்.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபரான சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்னைகள் இருந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அமீபா தொற்றால் 11 பேர் நோயின் அறிகுறிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மூளையைத் தின்னும் அமீபா காய்ச்சலால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காய்ச்சலான சுகாதாரமற்ற நீர்நிலைகளின் மூலமாக பரவுகிறது. அசுத்தமான ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வவியாக இந்த தொற்றானது உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களின் மூலமாகவும் பரவும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தொற்றானது உடலுக்குள் சென்று மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை கொன்றுவிட்டு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர், காய்ச்சல், தலைவலி, வாந்தி, அதீத சளி, கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியக மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.
உரிய சிகிச்சை பெறவில்லை எனில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மனிதர்கள் மூலம் தொற்றக்கூடிய நோய் அல்ல. நன்னீரில் மட்டுமே உயிர் வாழக்கூடியது. உப்பு நீரில் இவ்வகையான அமீபா உருவாவதில்லை. அசுத்தமான நீரில் குளிக்கும்போது, முகம் கழுவும் போது உடலின் வழியாக சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications