மரபணு பிரச்னையை கருவில் கண்டறிய தவறிய அரசு மருத்துவர்கள்.. 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், மரபணு பிரச்னையுடன் குழந்தை பிறந்த நிலையில், இப்பிரச்னையை கருவிலேயே கண்டறிய தவறியதாக அரசு மருத்துவர்கள் 2 பேர் உட்பட 4 மருத்துவர்கள் மீது குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 8ம் தேதி ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தை கண்களை திறக்கவில்லை. அதன் பிறப்புறுப்பிலும் மரபணு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு குறைந்து வருகிறது என்றும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பல்வேறு நாடுகள் தொடர் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் மறுபுறம் போதுமான சுகாதார வசதிகள் இல்லாததாலும், பொருளாதார பிரச்னை காரணமாகவும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை மக்கள் விரும்புவதில்லை.

சூழல் இப்படி இருப்பதால், ஒவ்வொரு பிரசவத்தையும் கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியது அரசின் கடையாகும். ஆனால், அரசு மருத்துவர்கள் சிலர் இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கேரளாவில் கரப்பிணி பெண்ணை சரியாக பரிசோதிக்காததால், அவருக்கு மரபணு சிக்கல் கொண்ட குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து தாய் கூறுகையில், "நான் கருவுற்றது தொடங்கி பிரசவம் வரை அரசு மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தேன். அரசு மருத்துவர்கள், சில ஸ்கேன்களை எடுக்க மிடாஸ் ஹெல்த் கேர் & ஸ்கேனிங் லேபரேட்டரி மற்றும் ஷங்கரின் ஹெல்த் ஸ்கேன் & டயக்னாஸ்டிக் ஆகிய தனியார் ஆய்வகங்களுக்கு பரிந்துரைத்திருந்தனர்.
அங்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் முடிவுகளின் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி எனக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை மரபணு ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தையின் கண்கள் திறக்கப்படவில்லை. அதேபோல பிறப்புறுப்பிலும் குறைபாடு இருக்கிறது. இது எல்லாம் ஸ்கேன் முடிவுகளை வைத்து தெரிந்துக்கொள்ள முடியும். இருப்பினும் இது குறித்து எனக்கு எந்த தகவலையும் மருத்துவர்கள் கொடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது புகார் அளித்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அரசு மருத்துவர்கள் புஷ்பா மற்றும் ஷெர்லி மீதும், பெயர் குறிப்பிடப்படாத தனியார் மருத்துவர்கள் 2 பேர் என மொத்தம் 4 மருத்துவர்கள் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 125 மற்றும் 125 B-ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரிவுகள் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விஷயங்கள் மீது கவனக்குறைவாக இருப்பதை குறிக்கிறது. பெற்றோரின் புகாரை தொடர்ந்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் மூலம் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
கர்ப்ப காலத்தில் உரிய பரிசோதனை செய்யாமல் இருந்த 4 மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications