கேரளாவை நடுங்க வைத்த சம்பவம்.. தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்! தோட்டத்தில் 4 பெண்கள்! சீரியல் கொலை?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் 68 வயதான முதியவர் செபஸ்டியான் என்பவரது தோட்டத்தில் போலீசார் தோண்டிய போது மனித மண்டை ஓடுகள், கால் எலும்புகள் சிக்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெண் கொலை வழக்கில் கைதான செபஸ்டியான் தோட்டத்தில் அவர் கூறிய இடத்தில் தோண்டிய போது, எலும்புக்கூடுகள் குவியல் குவியலாக கிடந்தது கேரளாவை உலுக்கியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே முதியவர் ஒருவர் 4 பெண்களை கொலை செய்து வீட்டுத் தோட்டத்தில் புதைத்ததாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை உலுக்கிய இந்த கொடூர கொலை சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டேன்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்த்தலை பள்ளிபுரத்தை சேர்ந்தவர் செபஸ்டியான் (வயது 68). இவர் ஏற்றுமானூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் கோட்டயம் அதிரம்புழையை சேர்ந்த ஜெய்னம்மா என்பவர் மாயமானார். இது தொடர்பாக கோட்டயம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் ஜெய்னம்மாவின் செல்போன் எண்ணில் பதிவான அழைப்புகளை செய்த போது அவருடன் செபஸ்டியான் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் செபஸ்டியானை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், ஜெய்னம்மாவை கொலை செய்து சேர்த்தலை பள்ளிப்புரத்தில் உள்ள தனது வீட்டுத்தோட்டத்தில் புதைத்ததாக கூறினார்.
மண்டை ஓடு, கால் எலும்புகள் கண்டெடுப்பு
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், செபஸ்டியான் கூறியபடி அவரது வீட்டுத்தோட்டத்தில் தோண்டினர். அப்போது ஜெய்னம்மாவின் மண்டை ஓடு, கால் எலும்பு போன்றவை கண்டெடுக்கப்பட்டன. அவற்றை போலீசார் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் செபாஸ்டியானை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது அங்கு பெண்களின் கைப்பை, ஜெபமாலை போன்றவை கிடந்தன.
மேலும் ஆங்காங்கே ரத்த கறைகள் படிந்து இருப்பதையும் கண்டு பிடித்தனர். இதனால் செபஸ்டியான் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து சமீப காலங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் மாயமான பெண்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது சேர்த்தலையை சேர்ந்த பிந்து பத்மநாபன், அதே பகுதியை சேர்ந்த சிந்து மற்றும் வாரநாட்டை சேர்ந்த ஆய்ஷா ஆகியோர் மாயமானது தெரிய வந்தது.
4 பெண்களை கொன்று புதைப்பு
இவர்களையும் செபஸ்டியான் கொலை செய்திருக்கலாம் என கருதிய போலீசார் சுமார் 2 ஏக்கர் பரப்பளவுள்ள அவரது தோட்டத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். அப்போது திடுக்கிடும் சம்பவமாக தோண்ட தோண்ட மனித எலும்பு துண்டுகள் கிடைத்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி மரபணு பரிசோதனைக்கு அனுப்பி இறந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, 'முதற்கட்ட விசாரணையில் செபஸ்தியான், ஜெய்னம்மா உள்பட 4 பெண்களை கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்து வைத்தது தெரிய வந்துள்ளது. அவர் எதற்காக பெண்களை கொலை செய்தார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றனர். தனியாக வசித்த பெண்களை குறிவைத்து செபஸ்டியான் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
என்ன நடந்திருக்கும்? என போலீஸ் விசாரணை
கோட்டயம் மற்றும் ஆழப்புலா கிரைம் பிராஞ்ச் போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். பிந்து என்ற பெண் மாயமான வழக்கில் நீதி வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சமூக அமைப்புகள், மூன்று பெண்கள் மாயமான வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.
செபஸ்டியான் தனியாக இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது அவருக்கு வேறு யாரேனும் உடைந்தாயாக இருந்தர்களா? எனக் கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள்ளனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications