கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு.. 11 நாள் மவுனத்தை ஒருவழியாக கலைத்த காங்கிரஸ் மேலிடம்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை புதிய அரசு அமையவில்லை. யார் முதல்வர் என்பதில் கடந்த 11 நாட்களாகக் குழப்பம் நீடித்து வந்தது. இந்தச் சூழலில் தான் கேரள முதல்வராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசன், மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 4ம் தேதி தமிழகத்தோடு கேரளா உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் தமிழ்நாட்டில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் பாஜக வென்றது. புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி வென்றது. இந்த 4 மாநிலங்களிலும் புதிய அரசு அமைந்துவிட்டன. ஆனால், காங்கிரஸ் வென்ற கேரளாவில் மட்டும் புதிய அரசு அமையவில்லை.

முடிவுக்கு வந்த குழப்பம்
கேரளாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வென்ற போதிலும், அங்கு யார் முதல்வர் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதில் கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் முதல்வர் ரேஸில் இருந்தனர். இந்தச் சூழலில் தான் 11 நாட்களுக்குப் பிறகு இந்தக் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. கேரள முதல்வராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலத்தில் கட்சியின் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவராகவும் திகழும் சதீசனை, காங்கிரஸ் மேலிடம் இறுதி செய்தது. இதன் மூலம் கே.சி. வேணுகோபால் மற்றும் ரமேஷ் சென்னிதலா போன்ற பிற மூத்த தலைவர்களின் முதலமைச்சர் கனவுகள் நிறைவேறாமல் போய் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த மூன்று பெயர்களும் தீவிரப் பரிசீலனையில் இருந்தது. இது கேரளாவில் கடும் கோஷ்டிப் பூசலுக்கு வழிவகுத்தன. இந்தச் சூழலில் தான் முதல்வர் குறித்த அறிவிப்பு ஒருவழியாக வந்துள்ளது.
அறிவிப்பு
இது குறித்து டெல்லியில் அறிவித்த காங்கிரஸ் தலைவர் தீபா தாஸ்முன்சி, "மே 7ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில், கேரள மாநிலத்தில் புதிய சட்டமன்றக் கட்சித் தலைவரை நியமிக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்க ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சட்டமன்றக் கட்சித் தலைவராக வி.டி. சதீசனை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
பெரும்பாலான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறப்பட்டாலும், 2021ல் கட்சி சந்தித்த தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்சியின் முக்கிய முகமாக சதீசன் உருவெடுத்து, பொதுமக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார். முதலமைச்சர் பதவிக்கு மூவரும் உறுதியாகப் போட்டியிட்டாலும், கட்சித் தலைமை மற்றும் பிற முதலமைச்சர் வேட்பாளர்களிடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்து மூலம் சதீசனை நியமிக்கும் முடிவு இறுதியில் எட்டப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய துவக்கம்
முதல்வராகத் தனது பெயர் அறிவிக்கப்பட்டது குறித்துப் பேசிய சதீசன், "இது கேரளாவுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம்.. 10 ஆண்டுக்கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு கேரள மக்கள் எங்கள் மீது வைத்துள்ள ஒரு பெரிய பொறுப்பு இது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் கடுமையாக உழைப்போம்.. எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
முக்கிய முகம்
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் அமோக வெற்றி பெற்றதற்கு வி.டி. சதீசனே முக்கிய காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார். ஊழல் குற்றச்சாட்டுகள், ஆட்சிப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல் என பினராயி விஜயன் அரசு மீது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து அதை மக்களிடையே எடுத்துச் சென்றதில் சதீசனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.












Click it and Unblock the Notifications