வயநாடு துயரம்! மக்களுக்கு உதவுங்கள்.. கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதி வழங்க ரெடியா? இதோ வழிமுறை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 280க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கேரளா இதுவரை சந்தித்திராத பேரழிவாக இது மாறியிருக்கிறது. இப்படி இருக்கையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோருக்காக கேரள அரசு வங்கிக்கணக்கை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதி கணக்குக்கு நேரடியாக நன்கொடை கொடுக்க முடியும்.
துயரம்: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நன்கொடை: நூற்றுக்கணக்கான மக்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதுவரை 280 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. கேரளாவுக்கு இந்த இயற்கை பேரிடர் பெரும் அடியாக மாறியிருக்கிறது. இருப்பினும் சரியான நேரத்தில் உதவுவதன் மூலம் மீண்டும் கேரளாவை மீட்டெடுக்க முடியும் என அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
இதற்காக வங்கி கணக்கு விவரங்களை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. இதில் நன்கொடை வழங்குவதன் மூலம் அது நேரடியாக கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதி கணக்குக்கு செல்லும்.
எப்படி நிதி கொடுப்பது?: https://donation.cmdrf.kerala.gov.in/#donation இந்த லிங்கை கிளிக் செய்து நன்கொடை அளிக்கும் வெப்சைட்டை ஓபன் செய்ய வேண்டும். அதில் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்.
1.தனிநபர் நன்கொடை
2.குழு நன்கொடை
இதில் தனிநபர் நன்கொடை என்பது நீங்களும், நானும் எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு தொகை தனித்தனியாக கொடுப்பது. இதை கிளிக் செய்தால் பேமெண்ட் முறைக்கான ஆப்ஷன்கள் வரும். அதில் உள்நாட்டு கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, இன்டெர்நெட் பேங்கிங் என ஆப்ஷன் இருக்கும்.
இரண்டாவதாக வெளிநாட்டு உள்நாட்டு கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, இன்டெர்நெட் பேங்கிங் ஆப்ஷன் இருக்கும். மூன்றாவதாக 'யுபிஐ' என்கிற ஆப்ஷனும் இருக்கும்.
ஆப்ஷன்கள்: இதில் முதல் இரண்டு ஆப்ஷன் அதாவது உள்நாட்டு, கிரடிட்/டெபிட்/இன்டெர்நெட் பேங்கிங் ஆப்ஷன் கிளிக் செய்தால் பெயர், இமெயில் ஐடி, மொபைல் நம்பர், எவ்வளவு நன்கொடை அளிக்கப்போகிறீர்கள் என்பதை உள்ளீடு செய்ய வேண்டும். இறுதியாக கேப்சா இருக்கும் அதை உள்ளீடு செய்து PROCEED என கிளிக் செய்தால் நாம் அனுப்பும் நன்கொடை நேரடியாக கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதி கணக்குக்கு சென்றுவிடும்.
அதேபோல UPI ஆப்ஷனை கிளிக் செய்தால், 20 வங்கி கணக்குகளின் விவரங்கள் லிஸ்ட் போடப்படும். அதில் எந்த வங்கி கணக்கை நாம் பயன்படுத்துகிறோமோ, அதன் மூலம் நன்கொடை கொடுக்கலாம்.
ரசீது: இதுவே குழு நன்கொடை, அதாவது நிறுவனங்கள் மூலமாக நன்கொடை அளிக்கிறீர்கள் எனில் அதற்கான ஆப்ஷனை கிளிக் செய்து, பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து நன்கொடை கொடுக்கலாம். ஆனால், முதல்முறை இப்படி நன்கொடை கொடுக்கிறீர்கள் எனில் உங்கள் நிறுவனம் குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதாவது, new user sign up here என ஆப்ஷன் இருக்கும்.
அதை கிளிக் செய்து, நிறுவனம் குறித்த தகவல்களை பதிவு செய்து புதிய user name மற்றும் passwordஐ பெறவும். பின்னர் அதை கொண்டு நன்கொடை கொடுக்கலாம்.
நீங்கள் செலுத்திய தொகைக்கான ரசீது உங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கப்படும். அதேநேரம், வருமான வரிச் சட்டம், பிரிவு 80G இன் படி நன்கொடைக்கு வருமான வரி விலக்கும் உண்டு. வெளிநாடுகளிலிருந்தும் நன்கொடை செலுத்த முடியும். இப்படி பெறப்படும் நன்கொடைகள் வயநாடு பகுதியில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு உள்ளிட்டவைக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications