பினராயி விஜயன் மகள் திருமணத்தில் பங்கேற்ற 7 ஆண்டு சிறை தண்டனை பெற்ற குற்றவாளி - வெடித்தது சர்ச்சை
திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராயி விஜயன் மகள் மறுமணத்தில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்ற குற்றவாளியும் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும் சிபிஎம் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI-ன் தேசிய தலைவர் ரியாஸூக்கும் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் 30 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
கேரளாவில் லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் திருமணத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம். ஆனாலும் 30 பேர் மட்டுமே இத்திருமணத்தில் பங்கேற்றனர்.

சர்ச்சை காரணம்
தற்போது இந்த திருமணம் தொடர்பான படங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளன. இந்த படங்களில் முதல்வர் பினராயி விஜயன் அருகில் முகமது ஹாசிம் என்பவரும் நிற்கிறார். இவர்தான் இப்போது சர்ச்சைகளின் கதாநாயகன்.

ஹாசிம் கொலையாளி
இந்த முகமது ஹாசிம் கொலை வழக்கு ஒன்றில் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார். அதுவும் கேரளா உயர்நீதிமன்றம் முகமது ஹாசிமை கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்தது; ஆனால் உச்சநீதிமன்றம் அவரை குற்றவாளி என உறுதி செய்து சிறைக்கு அனுப்பியது.

ரியாஸின் உறவினர்
தற்போது கொரோனா பாதிப்பில் பரோலில் வெளிவந்த முகமது ஹாசிம், மணமகன் ரியாஸுக்கு மிக நெருங்கிய உறவினர் என்ற அடிப்படையில் இத்திருமணத்தில் பங்கேற்றார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. தண்டனை பெற்ற கொலை குற்றவாளியை எப்படி முதல்வர் தமது அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் அனுமதிக்கலாம்? என்பது பாஜகவினரின் கேள்வி.

ஆளும் கட்சியில் அதிருப்தி
இதேபோல் பினராயி விஜயனின் சி.பி.எம். கட்சியிலும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. 30 பேர் மட்டுமே பங்கேற்கும் திருமணம் என்பதால் முகம்மது ஹாசிமை தவிர்த்திருக்க வேண்டும். உளவுத்துறை இதில் தோல்வி அடைந்துவிட்டது என சொந்த கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பினராயி விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications