அரசு பள்ளி உருவாக்கிய ஐஏஎஸ்.. கேரளாவில் கொரோனாவை விரட்டும் தமிழர்.. அசத்தும் திருவனந்தபுரம் கலெக்டர்
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தமிழர் ஒருவர் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.
திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தமிழர் ஒருவர் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். அம்மாவட்ட ஆட்சியர் கே கோபாலகிருஷ்ணன் அங்கு மிக முக்கியமான நபராக உருவெடுத்துள்ளார்.
கேரளா ஏறத்தாழ கொரோனா ஆபத்தில் இருந்து தப்பித்துவிட்டது என்று கூட கூறலாம். அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அதேபோல் புதிதாக கொரோனா ஏற்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது.
கேரளாவில் இதுவரை 375 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதில் நேற்று மட்டும் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் மொத்தமாக நேற்று மட்டும் 36 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர் . அங்கு மொத்தமாக 179 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 194 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். 2 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.

கலக்கல்
கேரளாவில் கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அம்மாநில அரசின் கடுமையான உழைப்புதான். முதல்வர் பினராயி தலைமையிலான அரசு மிக சரியான திட்டமிடலுடன் செயல்பட்டு, அங்கு கொரோனாவை விரட்டி அடிக்க தொடங்கி உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அண்ட் டீம் செய்யும் பணிகள் பெரிய அளவில் பலன் அளிக்க தொடங்கி உள்ளது. அங்கு கொரோனாவை விரட்டும் குழுவில் மிக முக்கியமான நபராக இருப்பவர்தான் திருவனந்தபுரம் கலெக்டர்.

யார் இவர்
நான் இந்த மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக உழைக்க போகிறேன். இவர்கள் என் குடும்பம் மாதிரி. இந்த மாவட்டத்திற்கு சில முறை வந்து இருக்கிறேன். இன்னும் அதிகமாக இந்த மக்கள் குறித்து தெரிந்து கொள்வேன். இந்த மக்கள் முன்னேற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்வேன். என் வாழ்க்கையை இந்த திருவனந்தபுர மக்களுக்காக கொடுக்க தயாராக இருக்கிறேன், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம், என்று கடந்த வருடம் ஜூன் 20ம் தேதி தனது பதவி ஏற்பின் போது பேசியவர்தான் திருவனந்தபுரம் கலெக்டர் கே கோபாலகிருஷ்ணன்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்
திருவனந்தபுரம் கலெக்டராக தற்போது இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி கே கோபாலகிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் 2013 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. இவரின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம்தான். திருவனந்தபுரம் கலெக்டராக இருக்கும் இவர், பல்வேறு துறைகளில் கேரளாவில் பணியாற்றி இருக்கிறார். கோழிக்கோடு துணை ஆட்சியர், மலப்புரம் துணை ஆட்சியர், அரசின் ஜலநிதி அமைப்பின் சிஇஏ, மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையின் துணை செயலாளர் ஆகிய துறைகளில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிகளை செய்து இருக்கிறார்.

செம வரலாறு
ஐஏஎஸ் அதிகாரி கே கோபாலகிருஷ்ணன் வரலாறே ஒரு ரோலர் கோஸ்டர் ரெய்டு என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் சென்னையில் பி டெக் படித்த இவர், பொருளாதாரத்தில் மேல்படிப்பு படித்துள்ளார். அதன்பின் 2003ல் ஐஐடியில் எம்டெக் படிக்க சென்றவர் பின் அதை பாதியில் நிறுத்தினார். அதன்பின் 2004 ல் சென்னையில் சில நாட்கள் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி இருக்கிறார். 2006 -2011 வரை அமெரிக்காவில் மென்பொருள் பணிகளை செய்துள்ளார்.

வறுமையான குடும்பம்
இவரின் அப்பா காளியண்ணன், செல்வமணி ஆகியோர் நாமக்கல்லில் விவசாயம் செய்து வருகிறார்கள். இவரின் குடும்பம் அவ்வளவு வசதி இல்லாத குடும்பம். அதனால்தான் என்னவோ கலெக்டர் ஆன பின் வறுமையான மக்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறார். இவர் தனது 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில்தான் படித்தார். நாமக்கல்லில் இருந்த சிறிய அரசு பள்ளியில் படித்துதான் தற்போது ஐஏஎஸ் ஆகியுள்ளார்.

எப்படி ஐஏஎஸ் ஆனார்
அமெரிக்காவில் பணியாற்றிய இவருக்கு இந்தியாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தீவிர ஆசை. இதனால் உடனே வேலையை தூக்கி எறிந்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வு எழுத பயிற்சி எடுத்துள்ளார். ஒன்றரை வருட தீவிர முயற்சியில் வெற்றிபெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனார். கேரளாவில் இவருக்கு போஸ்டிங் போடப்பட்ட பின் பல்வேறு பணிகளை செய்துவிட்டு கடந்த வருடம் திருவனந்தபுரம் ஆட்சியராக பதவியேற்றார்.

தீவிரமான பணிகள்
தற்போது திருவனந்தபுரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இவர் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறார். கொரோனா பாதிப்பு கேரளாவிற்குள் நுழைந்ததில் இருந்தே அதை தலைநகர் திருவனந்தபுரத்திற்குள் பரவ விடாமல் தீவிரமாக கண்காணித்து வருகிறார். சரியான திட்டமிடல், தீவிரமான கண்காணிப்பு, வேகமான நடவடிக்கை மூலம் இவர் திருவனந்தபுரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளார்.

பெரிய அளவில் திருவனந்தபுரத்தில் இல்லை
ஆம் கேரளாவில் மிக குறைவாக கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றுதான் திருவனந்தபுரம். அங்கு 14 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் 166 மற்றும் கண்ணூரில் 74 பேர் என்று பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் சர்வதேச விமான நிலையம் இருக்கும், தினமும் பல லட்சம் மத்திய கிழக்கு பயணிகள் வந்து செல்லும் திருவனந்தபுரம் கொரோனா ஆபத்தில் இருந்து எளிதாக தப்பி உள்ளது.

செம கண்டிப்பு
இதற்கு கே கோபாலகிரிஷ்ணன் மேற்கொண்ட கண்டிப்பான நடவடிக்கைதான் காரணம் என்று கூறுகிறார்கள். அவர் தொடக்கத்தில் இருந்தே இதில் கவனமாக இருந்தார். விமான நிலையத்தில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். நேரடியாக சென்று கண்காணிப்புகளை செய்தார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை நேரடியாக சென்று திடீர் சோதனை செய்தார். மக்களை வெளியே வர விடாமல் மிக கண்டிப்பாக பார்த்துக் கொண்டார் என்று அம்மாவட்ட மக்கள் கூறுகிறார்கள்.

மின்னல் வேக சோதனை
அதேபோல் இரவு இரண்டு மூன்று மணிக்கு கூட தமிழக கேரள எல்லையில் சோதனைகளை செய்து உள்ளார். கேரளாவில் இருந்து யாரும் வெளியே போகிறார்களா? கேரளாவிற்கு உள்ளே யாரும் வருகிறார்களா என்றும் சோதனை செய்துள்ளார். இதற்காக உளவுத்துறை போல தனியாக ஒரு டீமையே அமைத்து எல்லைகளில் கண்காணித்து வந்தார். பல நாட்கள் இரவு மூன்று மணிக்கு கூட சாலையில் இறங்கி சோதனைகள் மேற்கொண்டு உள்ளார்.

காண்டாக்ட் டிரேசிங்
அதேபோல் கேரளாவில் காண்டாக்ட் டிரேசிங் முறையில் மிக கண்டிப்பாக இவர் நடந்து கொண்டுள்ளார். அங்கு கொரோனா பாதித்த 14 பேரின் அனைத்து காண்டாக்ட்களையும் தீவிரமாக சோதனை செய்து எல்லோரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி உள்ளனர். இவரை அம்மாநில அரசும், சுகாதாரத்துறையும் பெரிய அளவில் நம்புகிறது என்று கூறுகிறீர்கள். தமிழரான இவர் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு மிகவும் நெருக்கம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு தேவைகளை பூர்த்தி செய்கிறார்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அங்கு இன்னொரு பக்கம் அவர் மக்களுக்கு வீடு தேடி உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். மக்கள் எங்கெல்லாம் உணவு கிடைக்காமல் இருக்கிறார்களோ அவர்களை சமூக வலைத்தளம் மூலம் கண்டுபிடித்து உணவு கிடைக்க ஏற்பாடு செய்கிறார். நேரடியாக வீட்டிற்கே சென்று உணவுகளை கொடுத்து வருகிறார். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகளை கவனிக்கிறார்.

மீனவ குடும்பம் மீது தனி கவனம்
அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின் கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு 14 மணி நேரம் இவர் உழைக்கிறார் என்கிறார்கள். திருவனந்தபுரம் பெரிய அளவில் பாதிக்காமல் இருக்க காரணம் இவர். அரசுடன் இவர் சரியான திட்டமிடலுடன் பணியாற்றுவது பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அங்கு மீனவ மக்கள் மீது கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு இவர் செயல்படுகிறார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர் மீன் குடும்பங்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார்.

செம மனிதர்
அதேபோல் இன்னொரு பக்கம் அங்கு மக்கள் உடன் இவர் மிகவும் நெருக்கமாக உள்ளார். மக்கள் எப்போது இவருக்கு போன் செய்தாலும் உடனே அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். எப்போது கால் செய்தாலும் உதவி செய்ய இவர் தயாராக உள்ளார். கொரோனா தொடர்பான அனைத்து பணிகளையும் இவர் முன்னின்று கவனித்து வருகிறார். தமிழரான இவரை அம்மாநில மக்கள் தங்கள் ஊர் நபர் போல பார்க்க தொடங்கி உள்ளனர்... எங்கோ அரசு பள்ளியில் படித்துவிட்டு தற்போது ஒரு மாவட்டத்தையே கொரோனாவில் இருந்து காக்கும் அரணாக மாறியுள்ளார் கே கோபாலகிருஷ்ணன்!












Click it and Unblock the Notifications