"டியர் காம்ரேட்".. இது மேயர் தானா? சந்தேகமாக கேட்ட இளைஞர்.. செல்பி அனுப்பிய ஆர்யா.. இதுதான் மாஸ்!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். 23 வயதாகும் இவர் இந்தியாவிலேயே மிகவும் இளம் வயது மேயர் ஆவார்.
சிபிஎம் கட்சியை சேர்ந்த இவர் மேயர் ஆன போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் இவரை கடுமையாக கிண்டல் செய்தனர். மாநகராட்சி கூட்டங்களில் சில காங்கிரஸ் கவுன்சிலர்கள் இவரை கிண்டல் செய்த சம்பவங்களும் நடந்தன.
ஆனால் அந்த கிண்டல்களுக்கு கூட்டத்திலேயே சரமாரியாக பதிலடி கொடுத்து.. தான் வெறும் சின்ன பெண் அல்ல.. தானும் முதிர்ந்த அரசியல்வாதிதான் என்பதை ஆர்யா ராஜேந்திரன் நிரூபித்தார்.
அதில் இருந்தே இவர் சீரியஸாக பல பணிகளை செய்து வருகிறார்.
சிறப்பான சேவை
இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் "நகர சபா ஜனங்களிலேக்" என்ற பிரச்சாரத்தை மேயர் ஆர்யா ராஜேந்திரன் தொடங்கி உள்ளார். இதன் மூலம் திருவனந்தபுரம் முழுக்க வார்டு வாரியாக மேயர் ஆர்யா ராஜேந்திரன் மக்களின் குறைகளை கேட்டு அதை தீர்த்து வருகிறார். இதற்காக அதிகாரபூர்வ வாட்ஸ் ஆப் குழுவையும் உருவாக்கி உள்ளார். இதில் மக்கள் வைக்கும் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக அதற்கு ஆர்யா ராஜேந்திரன் தீர்வு வழங்கி வருகிறார்.
இளைஞர்
இந்த பணியின் ஒரு கட்டமாக இளைஞர் ஒருவர்.. ஆர்யா ராஜேந்திரனிடம் தனது தெருவில் இருக்கும் பிரச்சனை பற்றி விளக்கி இருக்கிறார். இதை கேட்ட ஆர்யா ராஜேந்தரின் வாட்ஸ் ஆப்பில் உடனே பதில் அளித்துள்ளார். அதோடு அந்த பிரச்சனையையும் சரி செய்துள்ளார். இதனால் வியந்து போன அந்த இளைஞர் ஆர்யாவிற்கு நன்றி சொல்லி உள்ளார். வேகமாக செயலாற்றியதற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
யார் இது?
இதன்பின் சந்தேகம் அடைந்த அந்த இளைஞர்.. இது உண்மையில் மேயர் தானா? இல்லை அவரிடம் வேலை பார்க்கும் ஸ்டாப்பா? என்று கேட்டுள்ளார். உடனே ஆர்யா ராஜேந்திரன் கொஞ்சமும் யோசிக்காமல்.. தன்னுடைய டெஸ்க்கில் இருந்து செல்பி எடுத்து அனுப்பி தான்தான் ரிப்ளை செய்தது என்பதை நிரூபித்து உள்ளார். மேயர் நேரடியாக வாட்ஸ் ஆப்பில் இப்படி மக்களின் குறைகளை கேட்டது கவனம் பெற்றுள்ளது.
செல்பி
இதை பார்த்து வியந்து போன அந்த இளைஞர்.. அட இதுதான் மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை பார்ப்பது என்று சொல்வதா? டியர் காம்ரேட் மிக்க நன்றி என்று கூறி.. ஆர்யா ராஜேந்திரனுக்கு அந்த இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார். இதை ஆர்யா ராஜேந்திரன் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். நெட்டிசன்கள் பலரும் ஆர்யாவின் செயலை பாராட்டி வருகிறார்கள். மக்களுக்கு இவர் நேரடியாக உதவி செய்வதை பலரும் பாராட்டி உள்ளனர்.