கர்ப்பிணியாக இருந்தாலும் சீட் பெல்ட்.. யப்பா இத்தனை ரூல்ஸா? அபராதத்தில் இத்தனை ட்விஸ்ட்டா?
திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிய அந்த மாநில போக்குவரத்து போலீஸார் ஆங்காங்கே செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவியுள்ளனர்.
இந்தியாவில் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காததால் ஆண்டுதோறும் ஏராளமானோர் விபத்தில் சிக்கி இறக்கிறார்கள். மேலும் சிலர் தங்கள் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை உள்ளது. கேரளாவில் ஆண்டுக்கு சராசரியாக 4000 க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளால் இறக்கிறார்கள்.
இந்த இறப்பு எண்ணிக்கையை 20 சதவீதம் குறைப்பதற்காக கேரளாவில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த நவீன கேமராக்களை நிறுவி வருகிறார்கள். அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களையும் நிறுவியுள்ளனர்.

அதன்படி கேரளாவில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 726 கேமராக்களில் 675 செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவியுள்ளனர். அது போல் இவை வியாழக்கிழமை முதல் நேரலையாக இயங்க போகிறது. இதை மோட்டார் வாகன துறை உறுதி செய்துள்ளது. மோட்டார் வாகன ஓட்டிகள் ஒரே போக்குவரத்து விதிமீறல்களுக்கு பல்வேறு குற்றங்களுக்காக தனித்தனியே அபராதம் விதிக்கப்படுவர்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஆணையர் ஸ்ரீஜித், செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒரு வாகன ஓட்டி ஒரே தவறை செய்தாலும் அதை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு கேமராவும் அபராதம் விதிக்கும்படி படம்பிடிக்கும். உதாரணமாக இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றால் அவர் எத்தனை கேமராக்களில் ஹெல்மெட் இல்லாமல் பதிவாகிறாரோ அத்தனை முறை அவருக்கு அபராதம் விதிக்கப்படும்.
ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ 500 , கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ 500, ஓவர் ஸ்பீடிங்கிற்கு ரூ 1500 , இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் ரூ 2000, செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ 2000 அபராதம் என போலீஸார் அபராதத் தொகையை நிர்ணயித்துள்ளனர். அண்மைக்காலமாக விதிகளை மீறிவோர் குறித்து கேமராக்கள் மூலம் சோதனை ஓட்டத்தின் போது நாளொன்று 90 ஆயிரம் குற்றங்கள் நடந்துள்ளன.
மக்களிடம் இருந்து அதிக எண்ணிகையிலான அபராதத்தை வாங்குவது அரசின் நோக்கம் அல்ல. சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக செல்வதே சிறந்தது. இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும். அந்த இருவரும் குழந்தையை அமர்த்திக் கொண்டிருந்தாலும் அபராதம் விதிக்கப்படும்.

அது போல் காரின் முன் சீட்டில் அமரும் போது கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் சீட் பெல்ட் அணிவதில் எந்த விலக்கும் அளிக்கப்படாது. அது போல் குழந்தைகளுடன் காரில் பயணிக்கும் போது குழந்தைகளை பின்சீட்டில்தான் அமர வைத்திருக்க வேண்டும். இந்த போக்குவரத்து விதிகள் அனைத்து கேரளா மாநில போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும்.
அவசர கால வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். போக்குவரத்தை மீறியவர்களுக்கு 6 மணி நேரம் கழித்து ஒரு குறுந்தகவல் அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு வரும். அதில் அபராதத் தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்தநாள் சல்லான் அனுப்பப்படும் என ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், உள்ளூர் மக்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications