ஓணம் பண்டிகையும் அதுவுமா.. மலையாளி பெண்கள் ஏன் வெள்ளை நிற சேலை அணிகிறார்கள் தெரியுமா?
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையின் போது பெண்கள் பாரம்பரிய வெள்ளை மற்றும் தங்க நிறத்தினாலான புடவைகளை ஏன் அணிகிறார்கள் தெரியுமா?
மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தின் போது தொடங்கும் இந்த பண்டிகை திருவோணம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் பண்டிகையின் போது பூமிக்கு வருவதாக ஐதீகம்.
அதனால் மகாபலியை வரவேற்க அத்தப்பூ கோலமிட்டு வீட்டை அலங்கரித்து கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகையின் போது பெண்கள் பாரம்பரிய வெள்ளை மற்றும் தங்க நிற புடவைகளை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் கேரள புடவை முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
இந்த புடவை வெள்ளை அல்லது பாதி வெள்ளை, சந்தன நிறத்தில் இருக்கும். கேரளப்புடவை, கசவுப் புடவை என இது அழைக்கப்படுகிறது. இந்த புடவையில் உள்ள தங்க நிற பார்டர் செழுமையைக் குறிக்கிறது. அது போல் வெள்ளை நிறம் எளிமையை குறிக்கிறது. கேரள புடவையின் பார்டரில் பயன்படுத்தப்படும் ஜரிதான் கசவு என அழைக்கப்படுகிறது.

அதாவது அந்த புடவை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருளின் பெயர்தான் கசவு. இந்த புடவையின் நூல்கள் தூய தங்கத்தால் செய்யப்படுகின்றன. தங்கம் விலை உயர்ந்துள்ளதால் தங்கம், செம்பு பூசப்பட்ட வெள்ளி நூல்களை கொண்டு உற்பத்தியாளர்கள் தயாரிக்கிறார்கள். இந்த புடவைகளை தயார் செய்ய 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும்.
புடவையின் விலையை கசவுதான் தீர்மானிக்கிறது. இந்த வெள்ளை நிற புடவைகள் கேரளாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளது. இந்த புடவையை கேரளா முண்டு என்றும் அழைக்கிறார்கள். இது பார்ப்பதற்கு வேஷ்டி சுற்றப்பட்டிருப்பது போல் இருக்கும். இந்த புடவையின் ஜரிதான் கேரளாவின் பாரம்பரியமாகும்.












Click it and Unblock the Notifications