கோழிக்கோடு விமான விபத்து நடந்ததற்கு மனித தவறுகள் காரணமா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?
திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்து நடந்ததற்கு மனித தவறுகள் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து 184 பயணிகளை அழைத்து கொண்டு கோழிக்கோடு விமான நிலையத்திற்கு இன்று இரவு 7.30 மணிக்கு வந்தது.
அதில் 7 விமான பணியாளர்களும் இருந்தனர். இந்த விமானத்தை விமானி தரையிறங்க முயற்சித்த போது விமானம் சறுக்கிக் கொண்டு சென்று ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்திற்கு காரணம்
துணை விமானி ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுவரை 170 பயணிகள் மீட்கப்பட்டுள்ளார்கள். 45 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளன. 11 பேர் பலியாகிவிட்டனர். இந்த விமானம் தரையிறங்கும் போது பெய்த கனமழையே விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

தண்ணீர் தேங்கி
விமானம் விழுந்த வேகத்தில் இரண்டாக பிளந்துவிட்டது. இதில் விமானிகள் இருந்த பகுதி மற்றும் விமானத்தின் முன்பகுதி மிகவும் சேதமடைந்தது. இந்த விமான விபத்து குறித்து நிபுணர்கள் கூறுகையில் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
இந்த நிலையில் விமானம் தரையிறங்கிய நேரத்தில் கனமழை பெய்ததால் தரையிறங்குவதற்கு கண்ணை மறைத்து இடையூறாக இருந்திருக்கலாம். அது போல் ஓடுதளம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் தரையிறங்குவது மிகவும் கடினம்.

மனித தவறு
பொதுவாக விமானிகளுக்கு விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து வானிலை குறித்த தகவல்கள் உள்பட முக்கிய தகவல்கள் கொடுக்கப்படும். அது போல் விமானிகளும் விமான கட்டுப்பாட்டு அறையினருடன் தொடர்பில் இருப்பர். அவ்வாறிருக்கையில் வானிலை நிலவரம் குறித்து விமானிகளுக்கு விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல்கள் கொடுப்பதில் மனித தவறு நடந்திருக்கலாம் என்றனர்.

சோகம்
எனினும் இதுகுறித்து விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும். கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 3 தினங்களாக மழை கொட்டி வருகிறது. மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டு பல தொழிலாளர்கள் புதையுண்டதாக கூறப்படும் நிலையில் அதே கேரளாவில் தற்போது விமான விபத்து நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications