Kerala Lottery: லாட்டரி பிரியர்களே கவனம்.. ஹைடெக்காக நடக்கும் நூதன மோசடி! கேரள சைபர் கிரைம் போலீஸ் தீவிர விசாரணை
திருவனந்தபுரம்: கேரள லாட்டரி துறையின் அலுவலக இணையதள முகவரி போல, போலி முகவரி ஒன்றை உருவாக்கி ஆன்லைனில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் லாட்டரி பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது தொடர்பாக தற்போது திருவனந்தபுரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி டிக்கெட்டிற்கு அனுமதி உள்ளது. மாநில அரசே டிக்கெட்டுகளை அச்சிட்டு விற்பனை நடத்தி வருகிறது. அங்கு நாள்தோறும் குலுக்கல் நடைபெறுகிறது.

கேரள லாட்டரி டிக்கெட்
தினமும் ஒரு கோடி ரூபாய்க்கான பரிசுத்தொகை கொண்ட டிக்கெட்டுகளுக்கு குலுக்கல் நடைபெறுகிறது. அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவில் லாட்டரிகளுக்கு சட்டப்பூர்வ அனுமதி இருந்தாலும் தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் லாட்டரிக்கு தடை உள்ளது.
லாட்டரி டிக்கெட்டால் ஏழை எளிய மக்களின் பணம் வீணாக கரைந்து போய், மேலும் மேலும் கஷ்டப்பட்டதால் தமிழக அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு லாட்டரிக்கு தடை விதித்தது. லாட்டரிக்கு தமிழகத்தில் தடை இருந்தாலும் ஆங்காங்கே சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை நடைபெறுகிறது. போலீசார் கைது செய்து நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள்.
போலி இணையதளம் தொடங்கி விற்பனை
இது ஒருபக்கம் என்றால் லாட்டரி பிரியர்களை குறிவைத்து ஆன்லைனிலும் மோசடியாக டிக்கெட் நடைபெறுகிறது. கேரள லாட்டரி துறையின் அலுவலக இணையதள முகவரி போல, போலி முகவரியை உருவாக்கி ஆன்லைனில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து மோசடி நடைபெறுகிறதாம். கேரள லாட்டரியை பொறுத்தவரை ஆன்லைனில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலத்தவர்கள் பரிசு வென்றால், அவர்கள் கேரளாவுக்கு வந்து டிக்கெட் வாங்கியதை உறுதி செய்தால் மட்டுமே அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். இப்படியான சூழலில் ஆன்லைன் லாட்டரி என்ற பெயரில் நடக்கும் இந்த மோசடிக்கு அப்பாவி லாட்டரி பிரியர்கள் பலரும் இரையாகி பணத்தை இழக்கிறார்கள். keralastatelottery.site என்ற போலி இணையதளம் மூலம் கேரள லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக கேரள லாட்டரி இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்தது.
சைபர் குற்றப்பிரிவு போலீசார்
இதையடுத்து, கேரள லாட்டரி துறை அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இது குறித்து கேரள போலீஸ் தரப்பில் கூறுகையில், "கேரள லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ சின்னம், கேரள அமைச்சர்களின் படங்களை வைத்து அசல் இணையதளம் போலவே சித்தரித்து போலி ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
லாட்டரி வாங்குவோருக்கு போலி இணையதளம் வெகுமதியும் அளிப்பதாக தெரிகிறது. எனவே போலி இணையதளம் உருவாக்கி கேரள லாட்டரிகளை ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications