பாஜக ஒரு சீட் கூட ஜெயிக்கலையே? கேள்வி கேட்ட பெண் நிருபரிடம் அத்துமீறிய ‛தீனா’ பட நடிகர் - வழக்கு
திருவனந்தபுரம்: மலையாள நடிகரும், பாஜகவின் முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ் கோபி பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் சுரேஷ் கோபி மன்னிப்பு கோரினார். இத்தகைய சூழலில் தற்போது அவர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மலையாள சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக முன்னணி நடிகராக மாறினார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடா உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நிரபராதி, நடிகர் அஜித்தின் தீனா, விக்ரமின் ஐ உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும் அவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். பாஜகவில் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்தார். தற்போது அவரது பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தான் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் சுரேஷ் கோபி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார். அந்த சமயத்தில் அருகே நின்ற பெண் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றி பெற வில்லையே?'' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுரேஷ் கோபி, ‛‛நான் முயற்சி செய்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்'' என பதிலளித்தபடிய அத்துமீறி நடந்து கொண்டார். அதாவது பெண் பத்திரிகையாளரின் தோளில் கை வைத்து பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பத்திரிகையாளர் அவரது கையை தட்டிவிட்டார். ஆனாலும் சுரேஷ் கோபி தனது செயலை மாற்றவில்லை. தொடர்ந்து பெண் பத்திரிகையாளரிடம் எல்லை மீறினார்.
இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக பதிவானது. இந்த வீடியோ டிவி சேனல்களில் வெளியானது. இதையடுத்து சுரேஷ் கோபிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுரேஷ் கோபி மன்னிப்பு கோரினார். இதுபற்றி அவர், ‛‛பெண் பத்திரிகையாளர் என் வழியை மறித்தார். இதனால் அவரை நகர்ந்து நிற்கும்படி கூற முயன்றேன்.இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டேன். நான் ஒரு அப்பாவைபோல் அவரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்'' என்றார்.
சுரேஷ் கோபி மன்னிப்பு கோரினாலும் கூட சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கோழிக்கூடு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications