அதென்ன ஊரு தனி.. காலனி தனி? ராஜினாமாவுக்கு முன் அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரளா சிபிஎம் அமைச்சர்
திருவனந்தபுரம்: சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் கேரளாவிலிருந்து வெற்றி பெற்ற அம்மாநில அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் எம்பியாக பதவியேற்றிருக்கிறார். முன்னதாக அவர் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவு பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 8 இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்பியாகியுள்ளனர். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கே.ராதாகிருஷ்ணன் என்பவர் மட்டும் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் அம்மாநிலத்தின் பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் நலன், தேவஸ்தானம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். இதில் வெற்றி பெற்ற நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக இவர் பிறப்பித்த உத்தரவு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, ஒரு ஊர் என்று வந்துவிட்டால் அது இரண்டு பிரிவாக பார்க்கப்படும். ஒன்று ஊராகவும், மற்றொன்று காலனியாகவும், பிரித்து பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் இந்த பிரிவினை இருக்கிறது. ஊர் என சொல்லப்படும் பகுதியில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்களும், காலனி ஒடுக்கப்பட்ட, பட்டியல், பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் இடமாக இருந்து வருகிறது.
அரசு ஆவணங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி காலனி என்றே குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலைமை இருக்கிறது. எனவே இதனை மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், கேரள சிபிஎம் எம்பி கே.ராதாகிருஷ்ணன் தான் அமைச்சராக பதவி விலகுவதற்கு முன்னர், ஒடுக்கப்பட்ட, பட்டியல் சமூக மக்கள் வாழும் பகுதியை காலனி என்று குறிப்பிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதாவது கேரளாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி காலனி, சங்கேதம், ஊரு போன்ற வார்த்தைகளால் அடையாளப்படுத்தப்படுகிறது. இனி இந்த பகுதிகளை குறிப்பிட இந்த வார்த்தையை பயன்படுத்த கூடாது என சிபிஎம் எம்பி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபோன்ற வார்த்தைகள் அவமரியாதையை ஏற்படுத்துவதாகவும், எனவே காலத்திற்கு ஏற்ப புதிய பெயர்களே பொருத்தமானவை என்றும் தனது உத்தரவில் கூறியுள்ளார். மேலும் இந்த வார்த்தைகளுக்கு பதிலாக, நகர், உன்னதி, பிரகிருதி போன்ற பெயர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தவிர அந்த பகுதிகளில் உள்ள பிராந்திய பெயர்களையும் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "ஒடுக்கப்பட்ட, பட்டியல், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளை காலனி என்று கூறிவது தவறு என்று நீண்ட காலமாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து தற்போது இதை பயன்படுத்துவது மாற்றப்பட்டிருக்கிறது. காலனி என்ற வார்த்தை காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளம். எனவே, இந்த பயன்பாட்டை ஒழிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த உத்தரவுக்கு பின்னர் ராஜினாமா செய்த ராதாகிருஷ்ணன் மிகுந்த திருப்தியுடன் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications