சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்.. ஆன்லைன் பதிவு கட்டாயம் இல்லை.. சீசனையொட்டி முக்கிய அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், சபரிமலையில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு உடனடி தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்றும், அதே சமயம் பக்தர்கள் அனைவருமே தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தேவஸ்வம் அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கேரளத்தில் இருந்து மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, வடமாநிலங்கள் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை மாதத்தில் வரும் மண்டல கால பூஜை, மகரவிளக்கு பூஜை காலத்தின்போது லட்சக்கணக்கிலான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள்.

ஐயப்ப சுவாமி பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் கடைப்பிடித்து சபரிமலை கோவிலுக்குச் சென்று வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் சாமி கோவிலில் மண்டலகால பூஜைகள் நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளன. இதையொட்டி, நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படவுள்ளது.
பொதுவாக மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருப்பது வழக்கம். இதையடுத்து, மண்டலகால பூஜை ஏற்பாடுகள், முன்னேற்பாடுகள் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், கோவில் நிர்வாகத்தினரும் கலந்துகொண்டு பக்தர்களுக்காக செய்யப்பட வேண்டிய வசதிகள், ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சபரிமலை சீசனின்போது கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்ததால் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, வரும் மண்டல காலத்தில் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஸ்பாட் புக்கிங் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முறை அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தினந்தோறும் 80,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் பதிவு செய்யும் முறையை பின்பற்றக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். மேலும், ஆன்லைனில் பதிவு செய்யாமல் சபரிமலைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்தனர். இந்நிலையில், கேரள அரசின் தேவஸ்வம் அமைச்சர் வி.என்.வாசன் புதிய அறிவிப்பை ஒன்று வழங்கியுள்ளார்.
சபரிமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்துவதற்காகவும் சுவாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டு மண்டல பூஜை காலத்தின்போது தினந்தோறும் 80 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு உடனடி டிக்கெட் பெறும் திட்டம் இருக்காது.
அதேசமயம், குறிப்பிட்ட நேரத்தில் சுவாமியை தரிசிப்பதற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் பதிவு செய்யலாம். மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்காமல் செல்ல மாட்டார்கள. அனைத்து பக்தர்களுக்கும் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications