“வயநாட்டை ராகுல், பிரியங்கா மறந்துவிட்டனர்!” காங்கிரஸ் அலுவலகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்!
திருவனந்தபுரம்: வயநாட்டை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வசமாக மறந்துவிட்டனர் என்று, வயநாடு காங்கிரஸ் அலுவலகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறன. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கல்பேட்டா காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ. டி. சித்திக் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரள அடுத்த முதல்வர் தேர்வு குறித்த நிச்சயமற்ற சூழல் நிலவிய மே 13 அன்று, வயநாடு டி.சி.சி அலுவலகச் சுவர்களிலும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த போஸ்டரில், வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி வத்ரா அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், வயநாடு அடுத்த அமேதியாக மாறும் என்றும் எச்சரித்திருந்ததாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் இந்தச் போஸ்டர்களை அகற்றினர். இருப்பினும் வயநாட்டை கடந்து கேரளா முழுவதும் இந்த போஸ்டர் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
போஸ்டரை ஒட்டியது யார் என்பது குறித்து காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறது. சிசிடிவி காட்சிகளில் மர்ம நபர் ஒருவர் போஸ்டர்களை ஒட்டுவது பதிவாகியுள்ளது. அவரை அடையாளம் காணும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவை பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்நிலையில், இப்படி சர்ச்சை போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது அதிருப்பதியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications