கடைசி நிமிடத்தில் பறந்த போன் கால்! "அவரே" பேசினாராம்! நிமிஷா பிரியா மரண தண்டனை நிறுத்தப்பட்டது எப்படி
திருவனந்தபுரம்: ஏமன் நாட்டில் கொலை வழக்கு ஒன்றில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த மரண தண்டனையை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடைசிக் கட்ட முயற்சியாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் முக்கிய சன்னி முஸ்லீம் தலைவர் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் தலையிட்ட நிலையில் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் வேலைக்குச் சென்ற கேரள நர்ஸ் நிமிஷா பிரியா கொலைக் குற்றச்சாட்டில் இப்போது மரண தண்டனையை எதிர்கொண்டு இருந்தார். அவருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை மத்திய அரசு அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை.

மூத்த மத தலைவர்
அந்நாட்டுச் சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் ரத்தப் பணத்தை வாங்கிக்கொண்டு மன்னித்தால் நிமிஷா பிரியா தப்பிக்கலாம். ஆனால், நேற்று வரை அதில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. இதற்கிடையே இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் முக்கிய சன்னி முஸ்லீம் தலைவர் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டார்.
பாதிக்கப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரத்தப் பணத்தை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கொடுக்கும்படி அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கினார். ஷேக் அபூபக்கர் அகமது என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் 94 வயதான முஸ்லியார், இது தொடர்பாக ஏமன் நாட்டில் உள்ள மத அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வைத்த ஒரே வேண்டுகோள்
அவர் விடுத்த வேண்டுகோளின்படி, அங்குள்ள பிரபலச் சூஃபி தலைவரும் ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ் தலைமையில் இன்று ஏமனில் உள்ள தம்மரில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் உமர் பின் ஹபீஸின் பிரதிநிதிகள் மஹ்தியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர் ஏமன் ஷூரா கவுன்சிலின் உறுப்பினராகவும் இருக்கிறார். அவரும் இன்று தம்மரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இதுதான் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஷேக் அபூபக்கர் வட்டாரங்கள் கூறுகையில், "பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அந்த நபர் ஷேக் ஹபீப் உமரின் சூஃபியை பின்பற்றுபவர்.. இதனால் அவர் சொன்னால் கேட்பார் என்பதால் அது நம்பிக்கையாக இருக்கிறது" என்றார்.
முயற்சிக்குக் கிடைத்த பலன்
குடும்பத்தினரை சமாதானப்படுத்துவது ஒரு பக்கம் என்றால்.. நாளை மரண தண்டனையை ஒத்திவைக்கும் முயற்சியே பிரதானமாக இருந்தது. இதற்காக ஷூரா கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும் அந்த நபர் அங்குள்ள அட்டர்னி ஜெனரலையும் சந்தித்திருந்தார். இந்தச் சூழலில் தான் மரண தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மஹ்தி குடும்பத்தினரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர். மரண தண்டனையில் இருந்து நிரந்தரமாக நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சிக்கு இது ஒரு பாசிட்டிவ் சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.
சிக்கல் இதுதான்
கொல்லப்பட்ட மஹ்தி அங்குள்ள தம்மர் பழங்குடியைச் சமூகத்தைச் சேர்ந்தவராம். இதனால் அந்த குடும்பத்தினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்தப் பழங்குடியினரும் இந்த விவகாரத்தை எமோஷ்னலாக பார்க்கிறார்கள். மேலும், இதனால் தான் மஹ்தி குடும்பத்தினரை இதுவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. அதாவது இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பங்கேற்கவே இல்லையாம்.
அவர்களின் பிரதிநிதிகளே பங்கேற்றுள்ளனர். இப்போது ஷேக் அபூபக்கர் அகமது தலையீட்டின் காரணமாகவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையே தொடர்பு கொள்ள முடிந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications