கேரளா தேர்தலை பாதிக்கும் வளைகுடா போர்.. இரண்டிற்கும் என்ன சம்பந்தம்? ரொம்பவே கஷ்டம் தான்
திருவனந்தபுரம்: கேரள தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், அங்குப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே வளைகுடா போர் கேரள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. அங்குக் காங்கிரஸ் கை ஓங்க ஆரம்பித்துள்ள சூழலில், வளைகுடா போர் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.
வளைகுடாவில் ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்கிறது. இந்த போர் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. இதற்கிடையே இந்த போர் நமது இந்தியாவில் நடக்கும் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் சூழலில், வளைகுடா போர் கேரளத் தேர்தலில் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

கேரளா தேர்தல்
கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ள சூழலில், அங்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலைத் தான் வளைகுடா போர் பாதிக்கிறது. அதாவது இந்த மோதல் வளைகுடா நாடுகளுடனான விமானப் போக்குவரத்தைப் பாதிக்கிறது. இதனால் வெளிநாடு வாழ் மலையாளிகளின் வாக்குப் பதிவு குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வளைகுடா கேரளா வாக்காளர்கள்
இந்தியர்கள், அதிலும் குறிப்பாகக் கேரள மக்கள் மிக அதிகளவில் வளைகுடா நாடுகளில் வசித்து வருவது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் இதுபோல வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகளில் சுமார் 60% பேர் மாநிலத்திற்குத் திரும்பி வாக்களிப்பார்கள். ஆனால், இப்போது வெறும் 10% மலையாளிகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என அஞ்சப்படுகிறது. அதிக விமான கட்டணங்களும், நிச்சயமற்ற தன்மையும் இந்த விவகாரத்தைத் தேர்தல் பிரச்சனையாக மாற்றியுள்ளன.
வழக்கமாக வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு விமானக் கட்டணம் ₹8,000-₹13,000 என்ற ரேஞ்சிலேயே இருக்கும். ஆனால், இப்போது அது ₹60,000-ஐ தாண்டியுள்ளது. இந்த அதீதக் கட்டண உயர்வு வெளிநாடு வாழ் மலையாளிகளைத் தாயகம் திரும்பி வாக்களிப்பதைத் தடுக்கிறது. அதிக வசதி படைத்தோரை எளிதாகத் தாயகம் வந்து வாக்களிக்கலாம். ஆனால், அங்கு வசிக்கும் சாதாரணத் தொழிலாளர்களை இது அதிகம் பாதிக்கிறது.
சிக்கல்
மேலும், பொதுவாகத் தேர்தல் காலகட்டத்தில் வளைகுடாவில் இருக்கும் அரசியல் சார்பு சங்கங்களே சிறப்பு விமானங்களை இயக்கும். அதாவது பணக்கார தொழிலதிபர்களிடம் நன்கொடை பெற்று, மிகக் குறைந்த விலைக்கு டிக்கெட்களை வளைகுடாவில் வாழும் மலையாளிகளுக்குத் தருவார்கள். அதிலும் குறிப்பாக குட்டியாடி, பெரிந்தல்மன்னா, மற்றும் அழிக்கோடு எனப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கே முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், இப்போது எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் இதுபோல சிறப்பு விமானங்களை இயக்குவதும் சாத்தியமற்றதாக மாறியுள்ளது.
ஏன் முக்கியம்
கேரளாவில் வெளிநாடு வாழ் வாக்காளர்கள் மிக அதிகம் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. 2.34 லட்சத்திற்கும் அதிகமான கேரள மக்கள் இதுபோல வளைகுடாவில் வசிக்கிறார்கள். கேரளாவில் பொதுவாகவே போட்டி மிகக் கடுமையாக இருக்கும். சில நூறு வாக்குகளே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சூழலில், கடந்த காலங்களில் பலமுறை இந்த வாக்குகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்துள்ளன.. இதனால் ஒரு சிறிய பகுதியினர் வாக்களிக்க வராவிட்டாலும், கடும் போட்டி உள்ள தொகுதிகளில் முடிவுகள் மாறலாம்.












Click it and Unblock the Notifications