லண்டனில் வேலை கிடைத்த சந்தோசம்.. போனில் பேசியபடி, அரளி பூவை பிய்த்து சாப்பிட்ட பெண்.. சோகம்
திருவனந்தபுரம்: வெளிநாடு சென்று பணியாற்ற நினைத்த கேரளாவைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுக்கு, இங்கிலாந்தில் செவிலியராக வேலை கிடைத்தது.. அந்த சந்தோஷத்தில் செல்போனில் பேசியபடியே தெரியாமல் வீட்டின் வாயிலில் இருந்து அரளி செடியின் பூவை சாப்பிட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் ஹதிப்பாடு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருடைய, மகள் சூர்யா சுரேந்திரன் (24). பி.எஸ்சி நர்சிங் படித்து முடித்த சூர்யாவுக்கு, லண்டனில் செவிலியராக வேலை கிடைத்தது. இதையடுத்து, லண்டன் செல்வதற்காக கடந்த திங்கள்கிழமை கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்குச் உற்சாகத்துடன் சென்றார்

விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் அடிக்கடி வாந்தி எடுத்தபடி சென்ற சூர்யாவின் ஆவணங்களைச் சோதித்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே, அவரை அங்கமாலியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் உடல் நிலை மோசம் அடைந்தது. அங்கிருந்து, பருமலையில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவிலியர் சூர்யா உயிரிழந்தார்.
முன்னதாக செவிலியர் சூர்யா சுரேந்திரன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து விசாரித்துள்ளனர். அப்போது செவிலியர் சூர்யா உறவினர்களிடம் போனில் பேசியபோது, வீட்டு முற்றத்தில் செல்போனில் பேசியபடி நின்றிருந்த நிலையில், செடிகளை பிய்த்து வாயில் வைத்தேன்.. அப்போது தவறுதலாக அரளி செடியின் பூவை வாயில் போட்டு மென்றதாகவும், பின்னர் அதை துப்பிவிட்டேன் . மேலும் விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் பலமுறை வாந்தி எடுத்தேன் என்று உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார்..
இந்த நிலையில், சூர்யா சுரேந்திரனின் உடல் நிலை மோசம் அடைந்து இறந்ததை பார்த்த மருத்துவர்கள், இதயம் நின்று போனதே மரணத்துக்குக் காரணம் என்று தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் கூறும் போது, அரளியின் பூ, இலை, காய், வேர் ஆகியவை விஷம் நிறைந்தவை. அதில் இதயத்தை செயல் இழக்கச் செய்யும் தன்மை இருக்கிறது.
சூர்யா சுரேந்திரனின் உடல் பாகங்களை ஃபாரன்சிக் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த சோதனை முடிவுகள் வெளியான பின்னரே செவிலியர் சூர்யாவின் மரணத்துக்கு அரளிப்பூ காரணமா என உறுதியாகத் தெரிவிக்க முடியும்" இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அரளி விதை உயிரை பறிக்கும் மோசமான விஷத்தன்மை உள்ள தாவரம் ஆகும். அரளியை பொறுத்தவரை நேராக உடலுக்குள் சென்ற உடன் எந்த உறுப்பையும் பாதிக்காமல், நேரடியாக இதயத்தை தான் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.. அதில் உள்ள ஓரியன்ட்ரிங், நெரின் என்ற இரண்டு கிளைக்கோசைட்டுகள் இதய செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும்.. இதய துடிப்பை குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தை மிகவும் குறைத்து இறுதியாக மரணத்தை உண்டாக்கும். என மருத்துவர்கள் கூறுகிறார்கள். தெரியாமல் ஒரு இலை சாப்பிட்டால் கூட குழந்தையின் மரணத்திற்கு அரளி காரணமாக விடும் என்கிறார்கள். இதன் காரணமாக குழந்தைகள் உள்ள வீடுகளில் அரளிச்செடி வளர்க்கப்படுவது இல்லை.
அரளி விதை மரணத்தை உண்டாக்கும் என்றால் செவிலியர் அரளி பூ தான் சாப்பிட்டார் என்று சொல்லப்படுவதால், அதுவும் மரணத்தை உண்டாக்குமா என்ற கேள்விகள் கேரளா முழுவதுமே எழுந்துள்ளது. இதனிடையே அரளி பூவும் விஷத்தன்மை உடையது என்றே பலரும் சொல்கிறார்கள்..












Click it and Unblock the Notifications