இடைவிடாது முருங்கைமரம் ஏறும் கேரளா: முல்லைப் பெரியாறு ஆற்றில் புதிய அணை- ஆளுநர் ஆரிப் முகமது கான்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவோம் என்று கேரளா சட்டசபையில் உரையாற்றிய அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
கேரளா சட்டசபையில் இன்று ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார். இந்த உரையில் முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து ஆளுநர் ஆரிப் முகமது கான் பேசியதாவது:
கேரளா மக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியமானது என்பது மாநில அரசின் பெரும் கவலையாகும். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்துக்கு தேவையான நீரை பகிர்ந்து கொள்கிறோம். அதேநேரத்தில் கேரளா மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்காக நீரை பகிர்ந்து கொள்வதில் கேரளா உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில் 125 ஆண்டுகள் பழமையான தற்போதைய முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா அரசு விரும்புகிறது. இவ்வாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் தமது உரையில் தெரிவித்தார்.

Go Back Governor பதாகைகள்
முன்னதாக கேரளாவில் ஆளும் கட்சியின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆளுநர் உடந்தையாக இருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் Go Back Governor என்ற பதாகைகளையும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் உயர்த்தி பிடித்தனர். பின்னர் ஆளுநர் உரையைப் புறக்கணித்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என எத்தனையோ வல்லுநர்கள் திரும்ப திரும்ப திட்டவட்டமாக கூறிவிட்டன. ஆனாலும் கேரளா தாம் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்பதாக பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்கிற பல்லவியையே பாடி வருகிறது. ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்புகளில் ஒன்று.

மீண்டும் மீண்டும் வழக்கு
ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்கிறது கேரளா. மேலும் உச்சநீதிமன்றத்திலும் 2014-ம் ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும் கேரளா மனுத் தாக்கல் செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அச்சத்தைப் போக்க ஒரே தீர்வு புதிய அணை கட்டுவதுதான் எனவும் கூறப்பட்டுள்ளது. கேரளாவின் ஒவ்வொரு நிலைப்பாட்டுக்கும் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறது.












Click it and Unblock the Notifications