“ரோல் மாடல்” கேரளா.. உலகிலேயே முதல் மாநிலம்! கழிவுகளை அள்ள ரோபோக்கள் - மலக்குழி மரணங்களுக்கு “நோ”
கழிவுகளை மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை கொண்டு அகற்றும் தொழில்நுட்பத்தை உலகிலேயே முதல் முறையாக கேரளா அறிமுகம் செய்துள்ளது
திருவனந்தபுரம்: இந்தியாவில் மலக் குழியில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வகையில், கழிவுகளை மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை கொண்டு அகற்றும் தொழில்நுட்பம் உலகிலேயே முதல் முறையாக கேரள மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
எத்தனையோ கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் மலக்குழி மரணங்களை தடுக்க இதுவரை நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் ஏதும் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தன.
இதனால் நாடு முழுவதும் மலக்குழியில் இறங்கி தூய்மை பணி செய்யும் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வந்தன. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தடை செய்யப்பட்டாலும் இந்த துயரம் தொடர்ந்து வருகிறது.

தூய்மை பணி செய்யும் ரோபோ
தமிழ்நாட்டில் இது தடை செய்யப்படும் என்று கூறி கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் அது பரவலாக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் உலகிலேயே முதல் முறையாக கேரள அரசு நேற்று தூய்மை பணி செய்யும் ரோபாவை அறிமுகம் செய்து இருக்கிறது. திருச்சூர் மாவட்டதில் குருவாயூரில் முதன்முதலாக இதை கொண்டு வந்து இருக்கிறது.

மனிதர்களுக்கு பதில்..
இந்த தொழில்நுட்பம் மூலமாக மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களே கழிவு நீர் குழிகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபடும். பண்டிகூட் என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த ரோபோவை அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் இதனை அறிமுகம் செய்து வைத்தார். இந்த மனித கழிவுகளை அகற்றப்போகும் ரோபோட்டுக்கு மனிதர்களை போன்றே கைகள், மூட்டு பகுதிகள் எல்லாம் இருக்கும்.

பண்டிகூட் ரோபோ
இது மலக்குழிகளில் இறங்கும் தூய்மை பணியாளர்களை போன்றே கழிவுகளை அகற்றும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. வாட்டர் ப்ரூப் தொழில்நுட்பம் கொண்ட இந்த ரோபோவில் நவீன கேமராக்கள், சென்சார்கள் உள்ளது. அந்த சென்சார்கள் விஷ வாயுவை கண்டுபிடிக்கும். கேரளாவை சேர்ந்த ஜென்ரோபாடிக்ஸ் நிறுவனம் இந்த பண்டிகூட் ரோபோவை அறிமுகம் செய்து உள்ளது.

விருது
கேரளா ஸ்டார்ட் அப் மிசன் 2022 ஆம் ஆண்டு நடத்திய மாநாட்டில் "கேரளா பிரைட்" என்ற விருது இந்த ரோபோவுக்கு வழங்கப்பட்டது. இந்த ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குருவாயூரில் உள்ள மலக்குழிகள் ரோபாக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டு உள்ளன. இதனை ரோபோடிக் புரட்சி என்று அம்மாநில அரசு தெரிவிக்கிறது.

17 மாநிலங்கள்
கழிவு மேம்பாடு, தூய்மை பணியை நவீனப்படுத்துவதன் மூலம் அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுக்க முடியும் என அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்து உள்ளார். இந்த பண்டிகூட் ரோபா கேரளாவின் அனைத்து வகையான கழிவுகளை தூய்மை செய்யும் என்று அவர் கூறி இருக்கிறார். பண்டிகூட் ரோபோக்கள் இந்தியாவில் 17 மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

உலகிலேயே முதல் முறை
கடந்த 2018 ஆம் ஆண்டு பண்டிகூட் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மலக்குழிகளை தூய்மை செய்தன. இதனை தொடர்ந்து எர்ணாக்குளம் மாவட்டத்திலும் அது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது உலகின் முதல் முறையாக குருவாயூரில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.












Click it and Unblock the Notifications