கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்றுவதில் கருணாநிதி பங்களிப்பு இணையற்றது: பினராயி விஜயன் புகழாரம்
திருவனந்தபுரம்: திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் கருணாநிதி ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.
2018 ஆகஸ்ட் 7ம் தேதி காவிரி மருத்துவமனையில் காலமான இவரின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க இவரின் நினைவு தினம் திமுகவினர் மூலம் அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பாக இன்று அமைதி பேரணி நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்தப் பேரணி இறுதியாக கலைஞர் நினைவிடத்தில் முடிவடைந்தது.
அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில், தமிழக இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மராத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 5, 10, 21, 42 என 4 விதமாக நடைபெற்ற மராத்தான் பந்தயத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இறுதியாக வெற்றிபெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்.. வங்க கடல் போல அலங்கரிக்கப்பட்ட நினைவிடம்
அதேபோல் திமுக தரப்பில் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவை போற்றி, பல்வேறு மாநில முதலமைச்சர்களும் புகழஞ்சலி எழுதி வருகின்றனர்.
அந்த வகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில், திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை மு.க.ஸ்டாலிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
இதனை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.இதோடு கலைஞர் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளதால், #கலைஞர் என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் பலரும் கருணாநிதி குறித்த தங்களின் நினைவை, அவரது சாதனைகளை பற்றி எழுதி வருகின்றனர்.