சங் பரிவார் கும்பலால் நம் நாட்டுக்கே அசிங்கம் “அதுக்கு நேரம் வந்துடுச்சு” - கொதித்த பினராயி விஜயன்!
திருவனந்தபுரம் : வகுப்புவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்துக்கு எதிராக பாஜகவின் நுபுர் சர்மா கருத்து தெரிவித்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், உலக அரங்கில் இந்தியாவுக்கு சங் பரிவாரால் ஏற்பட்ட தலைகுனிவு இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

நுபுர் சர்மா
பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து நுபுர் சர்மாவை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது பாஜக.

உலக நாடுகள் மத்தியில்
இந்த விவகாரம் விவாதப்பொருளான நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டார். அதையடுத்து, சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியிலும் பா.ஜகவினரின் இந்த கருத்துக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக கத்தார், குவைத் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

சங் பரிவார் கும்பலால் தலைகுனிவு
இதுதொடர்பாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், "சங் பரிவார் மீண்டும் நம் நாட்டினை அவமதித்துள்ளது. உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம், பாஜக செய்தித் தொடர்பாளரின் பேச்சால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. வகுப்பு வாதத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

தர்ம சங்கடம்
முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆர்எஸ்எஸ் தேசத்தை தர்மசங்கடமான சூழலுக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. வெறுப்புப் பிரச்சாரங்களை செய்வோர் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேச வேண்டும் என்பது சங் பரிவார் கொள்கையிலேயே இருக்கிறது. இந்தப் பேச்சு சமூக பாதுகாப்புக்கு மட்டும் உலை வைக்கவில்லை, தேசத்தின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications