டிரைவர் பார்ட்னர்.. 1600 கோடிகளை அள்ளிய தம்பதி.. என்ட்ரியான அமலாக்கத்துறை.. அதிரடி ட்விஸ்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களிடம் 1600 கோடி ரூபாய் மோசடி செய்த திருச்சூர் தம்பதியின் ரூ.212 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதாகும் பிரதாபனும், அவருடைய மனைவியான 40 வயதான ஸ்ரீனாவும் ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி உள்ளனர். இந்த நிறுவனத்தின் பங்குதாரராக அவரது கார் டிரைவர் அருண் (36) இருந்துள்ளார். 3 பேரும் சேர்ந்து தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பிரதாபன், தலைமை செயல் அதிகாரியான அவரது மனைவி ஸ்ரீனா ஆகியோர் மளிகை பொருட்களை விற்கும் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் அதிக லாபம் தருவதாக கூறி பலரிடம் இருந்து பணம் பெற்று ரூ.1,600 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கிறார்கள். நிறுவன லாபத்தில் 40 சதவீதம் வருமானம் தருவதாக கூறி, முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று 4 தனியார் வங்கிகளில் 20 கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்திருக்கிறார்கள்.
இதையடுத்து நிதி நிறுவன உரிமையாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பட்ஸ் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக முடக்க திருச்சூர் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே தம்பதி உள்பட 3 பேரும் சேர்ந்து மோசடி செய்த ரூ.100 கோடியை புரோக்கர்கள் மூலம் வெளிநாட்டிற்கு ஹவாலா பணமாக கடத்தியது விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையினருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நிதி நிறுவனம் மற்றும் தம்பதி வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

மோசடி பிரச்சனை ஒருபுறம் எனில், அமலாக்கத்துறையும் களம் இறங்கியதால், மோசடி தம்பதி உள்பட 3 பேரும் தலைமறைவாகினர். இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மோசடி தொடர்பாக பிரதாபன், ஸ்ரீனா ஆகியோரின் ரூ.212 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளனர்.
அதன்படி திருச்சூர், பொள்ளாச்சியில் உள்ள நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. தம்பதி நடத்தி வந்த தனியார் நிதி நிறுவனம் தொடர்பான 55 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் 1600 கோடி ரூபாய் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து கும்பலின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications