"கேரளாவில் நடந்தது குண்டுவெடிப்பு தான்.." டிஜிபி பரபர தகவல்.. பிரார்த்தனை கூட்டத்தில் நடந்தது என்ன
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென நடந்த வெடி விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், இது தொடர்பாக அம்மாநில மாநில டிஜிபி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்துள்ள களமச்சேரியில் இன்று பிரார்த்தனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் 2,000 பேர் ஒன்றுகூடி கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது திடீரென வெடிச் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து பிரார்த்தனை கூடத்தில் தீ பற்றியுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். அங்கிருந்தவர்களுக்கு முதலில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
கேரளா குண்டு வெடிப்பு: இந்த மோசமான சம்பவத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.. இந்தச் சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்தா இல்லை திட்டமிட்டு நடந்த்தப்பட்ட தாக்குதலா என்று முதலில் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையே இது குறித்து கேரளா மாநில டிஜிபி விளக்கமளித்துள்ளார். கேரளாவில் நிகழ்ந்ததுக் குண்டு வெடிப்புதான் என்று கூறிய அவர், ஐஇடி வெடிமருந்து மூலம் இந்த குண்டு வெடிப்பை நடத்தியுள்ளதாகவும் கேரளா குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டிபன் பாக்ஸ் குண்டு: அவர் மேலும் கூறுகையில், "டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இது ஐஇடி கருவி எனத் தெரியவந்துள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
ஜம்ரா மையத்தில் காலை காலை 9:40 மணியளவில் முதல் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 36 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூத்த அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்துவிட்டனர். கூடுதல் டி.ஜி.பி. சம்பவ இடத்திற்குச் சென்று வருகிறார். நானும் விரைவில் சம்பவ இடத்திற்குச் செல்கிறேன்.
விசாரணை நடத்துகிறோம்: முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம்.. இந்த குண்டுவெடிப்பில் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நிச்சயம் கண்டுபிடிப்போம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாகத் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும். இது குறித்து விசாரிக்க இன்றே சிறப்புப் படை அமைக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து வெறுப்பு கருத்துகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றின் குழுக்கள் கேரளாவுக்கு விரைந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார்.. இந்த வெடி விபத்து குறித்து வரும் காலத்தில் கூடுதல் தகவல் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications